Show all

இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள்

இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள் நாட்டின் பல பகுதிகளில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி வழியில் மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை வலுவாக எழுந்தது. இதையடுத்து, 1956ல் நவம்பர் 1ஆம் நாளன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. மலையாளம் பேசும் மக்களும் கன்னடம் பேசும் மக்களும் தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் நாளை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர். கேரளாவில் இந்த தினம், கேரள பிறவி தினம் என்றும் கர்நாடகத்தில் இந்த நாள் கன்னட ராஜ்யோத்ஸவம் என்றும் கொண்டாடப்பட்டுவருகிறது. மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு பல நிலப்பகுதிகள் அளிக்கப்பட்டதால் பொதுவாகவே இந்த நாள் குறித்த உற்சாகம் தமிழகத்தில் காணப்படுவதில்லை. ஆனால், மொழி அடிப்படையில் தமிழ்நாடு பிரிக்கப்பட்ட பிறகுதான், மாநிலத்தில் வளர்ச்சியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான ரவிக்குமார். ஒரு நிலப்பகுதி மொழிவழியாக பிரித்து, ஆளப்படும்போதுதான் அதற்கென ஒரு சமூக கூட்டு உணர்வு வருகிறது என்று கூறுகிறார் அரசியல் செயற்பாட்டாளரும் மொழியியல் ஆர்வலருமான செந்தில்நாதன். மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதையும் பிராந்திய அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள வட இந்திய மாநிலங்கள் அந்த அளவு வளர்ச்சியின்றி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், மொழி வழியாக மாநிலங்கள் பிரிந்ததால் மட்டுமே வளர்ச்சி வந்துவிடுமா என்ற விவாதங்களும் நீடிக்கவே செய்கின்றன. எதிர்பார்த்த வளர்ச்சி இல்லையென்றால், மாநிலங்களின் அதிகாரம் தொடர்ந்து நடுவண் அரசால் மையப்படுத்தப்பட்டு வருவதே காரணம் என்கிறார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான சுபவீர பாண்டியன். இருந்தபோதும், தங்களுடைய மொழி, கலாச்சாரம், பிராந்தியம் வளர வேண்டும் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் தற்போது குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் தலைவர்களால் திரிக்கப்பட்டு இனவெறியாக மாற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகிறார் ரவிக்குமார். மொழிவழியாக மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்திருந்தால், தமிழகம் தற்போது சந்திக்கும் எல்லைப் பிரச்சனைகள், நதி நீர் தாவாக்கள் போன்றவை ஏற்பட்டிருக்காது என்ற வாதம் வலுவானதல்ல என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். வேறுவிதமான பிரச்சனைகளை அவை உருவாக்கியிருக்கும் என்கிறார்கள் அவர்கள். இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, இந்த மாநிலங்களில் அடங்கியிருந்த பல்வேறு பகுதிகள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக போராடியதில் உத்தராகண்ட், தெலங்கானா என பிராந்திய அடிப்படையிலும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. தற்போதும் இந்தியாவில் பல தனி மாநிலக் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.