Show all

ஹிந்துத்துவா அடிப்படை கொள்கை முடிவுகளுக்காகவா! நடுவண் அரசின் புதிய இணைச் செயலாளர் தேர்வு முறை

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு, தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் இருந்து தேர்வு செய்யும் அரசியல் சட்ட விரோத அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த அரசியல் சட்ட விரோத நியமனங்களை எதிர்க்க பாஜக அல்லாத அனைத்து மாநில முதல்வர்களும், குறிப்பாக சமூக நீதிக்காக பாடுபடும் முதல்வர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமூக நீதிக் கோட்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்தில், ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வரும் நடுவண் பாஜக அரசு இப்போது தனியார் நிறுவனங்களில் இருந்தும், ஆலோசனை நிறுவனங்களில் இருந்தும் நடுவண் அமைச்சகங்களில் உள்ள இணைச் செயலாளர் பதவிக்கு நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவண் அரசின் தலையாய அமைச்சகங்களான வருவாய்த்துறை, நிதித்துறை, பொருளாதாரத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் துறை, போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை, கப்பல் போக்குவரத்துத் துறை, சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, விமானத்துறை, வர்த்தகத்துறை, மரபு சாரா எரிசக்தித் துறை உள்ளிட்ட துறைகளில் தலையாய கொள்கை முடிவுகள் எடுக்கவும், திட்டங்களைச் செயல்படுத்தவும் நிபுணர்கள் தேவை என்று ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டு கழித்து திடீர் ஞானோதயம் ஏற்பட்டதைப்போல நடுவண் அரசு, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஆகவே, கடந்த நான்கு ஆண்டுகளாக கொள்கைகளை வடிவமைத்திடும் திறமை இல்லாதவர்களை வைத்துக்கொண்டு இந்த தலையாய துறைகளில் எந்த மாதிரியான நிர்வாகத்தை நடுவண் பாஜக அரசு நாட்டுக்குக் கொடுத்திருக்கிறது என்பது 'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை' என்பதைப்போல விளங்க வைத்துள்ளது.

இணைச் செயலாளர் பதவியில் அமர்த்தப்படும் இவர்களுக்கு 1 லட்சத்து 44 ஆயிரத்து 200 முதல் 2 லட்சத்து 18 ஆயிரத்து 200 வரை மாத சம்பளம் என்றும், இந்தப் பணி நியமனம் மூன்று ஆண்டுகளுக்கு முதலிலும், அதன் பிறகு ஐந்தாண்டுகள் வரை நீடிக்கப்படலாம் என்றும் கூறியிருப்பதும், அவர்கள் கொள்கை முடிவுகளை எடுக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தப்படுவார்கள் என்று கூறியிருப்பதும், நடுவண் அமைச்சகங்களிலும், நடுவண் அரசு பணியிலும் செயலாற்றி வரும் நடுவண் அரசுப் பணியாளர்களை மட்டுமின்றி, அந்தத் துறைகளின் தலைவர்களாகவும் பல்வேறு பொறுப்பிலும் உள்ள இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் இதர அகில இந்திய சேவை அதிகாரிகளின் திறமையை கொச்சைப்படுத்தும் செயலாகும். 

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்தே நடுவண் அரசு பணியில் உள்ளவர்களின் 'செயல்பாட்டை' ஆய்வு செய்கிறோம் என்று கூறி பலரை நீக்கம் செய்திருக்கிறது.

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிப் பணித்துறை உள்ளிட்ட அகில இந்திய பணி அதிகாரிகளின் தேர்வை பனிரெண்டு விரிவுரையாளர்களிடம் ஒப்படைக்கத் துடிக்கிறது. 

நடுவண் அரசு அமைச்சகங்களிலும், துறைகளிலும் மண்டல் ஆணையம் பரிந்துரைப்படி 27 விழுக்hடு இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தாமல் சமூக நீதிக்கு சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. இந்த சூழ்நிலையில் புதிய நியமனங்கள் மூலமும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் கொள்கை முடிவு எடுக்கும் முக்கியப் பதவிகளுக்கு வந்து விடக்கூடாது என்பதால் இப்போது தனியார் நிறுவனங்களில் இருந்தும், ஆலோசனை நிறுவனங்களில் இருந்தும் அரசு வேலைக்கு ஆள் தேடுகிறது. இதன் மூலம், அரசின் கமுக்கம் இனி தனியார் கையில் தாராளமாக போய் சேரும் சூழ்நிலை ஏற்பட்டு 'அரசாங்க கமுக்கத்தின்' புனிதம் தகர்த்து எறியப்படுவது நாட்டிற்கு பேராபத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை சங் பரிவார் அமைப்புகளின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட்டு வந்த இந்தியத் தலைமை அமைச்சர், ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் அவர்களை நேரடியாகவே அரசாங்கத்தில் அமர்த்தி, அரசு கருவூலத்திலிருந்து சம்பளத்தைக் கொடுத்து, ஹிந்துத்துவா அடிப்படையில் அரசின் கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்திற்கு கொண்டு வர இந்தத் தேர்வை நடத்துகிறார்.

ஆகவே, தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் இருந்து இணைச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யும் இந்த அறிவிப்பை நரேந்திர மோடியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பணியாளர் துறை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மண்டல் ஆணையம் பரிந்துரைகளின் படி நடுவண் அரசின் தலையாயத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகள் இடம்பெறுவதைத் தடுக்கும் இந்த ஆதிக்க மனப்பான்மையை நடுவண் பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் அடியோடு கைவிட வேண்டும். இந்த அரசியல் சட்ட விரோத நியமனங்களை எதிர்க்க பாஜக அல்லாத அனைத்து மாநில முதல்வர்களும், குறிப்பாக சமூக நீதிக்காக பாடுபடும் முதல்வர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,815. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.