Show all

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல்! ஒரே நாடு, ஒரே மொழி என்று பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்

ஒரே கல்விக் கொள்கை உட்பட ஒன்றிய அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றன. அதேபோல் இந்தியாவுக்கு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என்று முழங்கியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒரே நாடு, ஒரே மொழி- இப்படி பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அசத்தல் பேச்சு கேரளாவில் எதிரொலித்து, இந்தியா முழுவதும் சுழன்றடிக்கிறது. 

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்று வரும் மனோரமா செய்தி நிறுவன கருத்தரங்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டு மலையாளத்தில் உரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக கருந்தரங்கு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட போது மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ வைத்தது. 

கூட்டாட்சி கருத்தியலும், விடுதலையால் பெற்ற உரிமைகளும், அனைத்துவிதமான வளர்ச்சிக்கான முற்போக்கு சிந்தனைகளும் இணைந்தது தான் இந்தியாவை முன்னேற்றி உள்ளன. இந்தியாவின் வேற்றுகளை மதிக்கக் கூடியவராக அன்றைக்கு நேரு இருந்தார்.

மொழிஅடிப்படை மாநிலங்களை நேரு உருவாக்கினார். ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தினார். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி கொடுத்தார். உடன்பிறப்பாய் பழகுதலை வலியுறுத்தியதோடு, நாடாளுமன்ற மக்கள்பாட்டிற்கு முதன்மைத்துவம் அளித்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை மாற்றினார்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முதலமைச்சர்களிடம் கடிதம் வாயிலாக பேசினார். இதனால் தான் இந்தியா 75 ஆண்டுகள் வலிமையாக நின்றுகொண்டுள்ளது. இந்தியா மேலும் வலிமையாக இருக்க வேண்டும் என்றால், மக்கட்பாட்டு (டெமாக்கரசி) கருத்துகளைத் தொடர்ந்து பேச வேண்டும். சமத்துவம் மாநில சுயாட்சி, உடன்பிறப்பாய் பழகுதல், ஒப்புரவு கருத்துகளை வலியுறுத்தினால் மட்டுமே நாடு நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும்.

75 ஆண்டு விடுதலைக் கொண்டாட்டம் வெறும் கொண்டாட்டமாக இருந்திட கூடாது. அடுத்த வளர்ச்சிக்காக திட்டமிடலாக இருக்க வேண்டும். மாநில அரசுகள் தன்னிறைவு பெற்ற அரசுகளாக இருந்தால் தான், இந்தியா வலிமையாக இருக்கும். வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலம் தானே தவிர, பலவீனம் அல்ல. மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் மாநில அரசுகள் தான். அதனால் ஒன்றிய அரசு கூட்டாட்சி கோட்பாடுகளை மதித்து செயல்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக சில நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக உரிமையே மறுக்கப்படுகிறது. திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கருத்து கூறுவதற்கான களத்தில் கூட கருத்து பேச முடியாத நிலை இருக்கிறது. 

ஒரே கல்விக் கொள்கை உட்பட ஒன்றிய அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றன. அதேபோல் இந்தியாவுக்கு ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என்று முழங்கியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,325.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.