Show all

இறைச்சிக்காக மாடு விற்பனை செய்யலாம்: உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவு

நடுவண் அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து பிறப்பித்த அறிவிப்புக்கு, மதுரை உயர் அறங்கூற்றுமன்றம் தடை விதித்தது.

     இந்தத் தடையை அங்கிகரித்துள்ளது உச்சஅறங்கூற்று மன்றம்.

     கால்நடைச் சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து கடந்த மே23 அன்று நடுவண் அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

     கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க நடுவண் அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த எஸ்.செல்வகோமதி மற்றும் பி.ஆஷிக் இலாஹி பாவா ஆகியோர் மதுரை உயர் அறங்கூற்;று மன்றக் கிளையில் இரு வேறு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடுவண் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து அறங்கூற்று மன்றம் உத்தரவிட்டிருந்தது.

     அதற்கு எதிராக உச்ச அறங்கூற்று மன்றத்தில் நடுவண் அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இதே போல இறைச்சிக் கூடங்களின் உரிமையாளர்கள்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நடுவண் அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச அறங்கூற்று மன்றத்திலும்  மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது இன்று தலைமை அறங்கூற்றுவர் ஜெ.எஸ்.கேஹர்  தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நடுவண் அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மனுதாரர்கள் சார்பில் காங்கிரஸின் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் அணியமாகினர்.  

     அப்பொழுது வேணுகோபால் அறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தின் மதுரை கிளை ஏற்கனவே தடை விதித்த விட்டது. எனவே புதிதாக எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்த அறிவிப்பில் நிறைய மாறுதல்களை செய்து, புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட நடுவண் அரசு ஆலோசித்து வருகிறது

என்று தெரிவித்தார்.

     நடுவண் அரசின் இந்த வாதத்தினை ஏற்றுக் கொண்ட தலைமை அறங்கூற்றுவர் தலைமையிலான அமர்வானது, உயர் அறங்கூற்று மன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, வழக்கினை முடித்து வைத்தும் உத்தரவிட்டது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.