Show all

விஜய்சேதுபதி இப்படி ஆயிட்டாரே!

பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, மேடைப் பேச்சையும் செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்தது பரபரப்பாக்கப்பட்டு வருகிறது.

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகமே தமிழினத் துரோகி என்ற பட்டியலில் வைத்திருக்கிற முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி 800 படத்தில் நடிப்பது சர்ச்சையாகியுள்ள நிலையில் சென்னையில் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி செய்தியாளர்களைச் சந்திப்பதை தவிர்த்துள்ளார்.

இலங்கை முன்னாள் துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் முதல்பார்வை சுவரொட்டி வெளியானதில் இருந்தே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி தொடங்கி கவிஞர்கள் தாமரை, வைரமுத்து தொட்டு தமிழ் தேசிய தலைவர்கள் சீமான், திருமுருகன் காந்தி வரை அனைவரும் விஜய் சேதுபதிக்கு படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திரைத்துறையிலிருந்தும் பலரும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஆனால், இந்த முன்னெடுப்பு தொடர்பாக விஜய் சேதுபதி இதுவரையில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்துவருகிறார். 800 பட முன்னெடுப்பு சர்ச்சையானப் பிறகு எந்த பொது நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்தநிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் நடந்த இயற்கைச்சாறு தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி தமிழர் பாரம்பரிய உடையில் உழவர்களுடன் கலந்துகொண்டார்.

ஆனால் இந்த விழா மேடையில் விஜய் சேதுபதி பேசுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் எதுவும் பேசவில்லை. மேலும் விஜய்சேதுபதி வருகை அறிந்து அங்கு வந்த செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்து நகர்ந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.