Show all

மாறாத மனிதர் நடிகர் ரஜினிகாந்த்!

என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் (சன்னியாசிகளிடம்) உள்ள மனநிறைவு மகிழ்ச்சியில் பத்து விழுக்காடு கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கூறுகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

08,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு வகையான ஓக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அந்த அமைப்பின் நூல் ஒன்றை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது.

ஓக நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு மனநிறைவு கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான். 

இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விடையம், என் கொண்டாடிகள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராக இருக்கிறேன். 

இமயமலை இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும். குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அதனை சாப்பிட்டதால் ஒரு கிழமைக்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். 

கங்கை ஆறு ஏன் புனிதம் என்றால், மூலிகைகள் எல்லாம் அதில் கலக்கும். அதுமட்டுமல்ல, அங்கே உள்ள சித்தர்கள் குளிப்பதால் பவித்ரமாக இருக்கும். 

உடல்நிலையை பாதுக்காக்க வேண்டும், உணவு சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறு அகவையில் உடல் நலப் பாதுக்காப்பை விடவும், அகவை முதிர்ந்த பின் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சொத்துகளை விட்டுச் செல்வதை விடவும், நோயாளியாக இருந்திடக் கூடாது. இது அனைவருக்கும் துன்பம். அதேபோல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.

நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும். மனிதர்கள் கடந்த காலங்களையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வர். ஆனால் குழந்தைகள் அப்படியல்ல. வலிகளில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும். வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். 

என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் (சன்னியாசிகளிடம்) உள்ள மனநிறைவு மகிழ்ச்சியில் பத்து விழுக்காடு கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தும் அவரின் இரண்டு கொண்டாடிகள் போல சன்னிசியாக மாற இடம் கொடுத்தால் மீதி தொன்னுறு விழுக்காடு மனநிறைவு, மகிழ்ச்சியை அடைய முடியும் என்பதை அவர் புரிந்திருந்தாலும் நான் மாறமாட்டேன் என்று இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார். 

ரஜினிகாந்தின் பேச்சைக் கேட்டு நாமும் மாறவில்லை. தானே உணர்ந்து, நடிகர் ரஜினிகாந்தும் மாறவில்லை. ஆனால் பாவம் அந்த இரண்டு கொண்டாடிகள் மாறி இருக்கிறார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,319.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.