Show all

இவ்வளவு நீளம் வேண்டாமே! கோப்ரா திரைப்படம் குறித்து கொண்டாடிகள்

நேற்று திரையிடப்பட்ட கோப்ரா படம் மிகவும் நீளமாம். நீளம் குறித்த கொண்டாடிகள் கருத்தாடலையொட்டி, முப்பது மணித்துளி காட்சிகள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: விக்ரம் நடித்துள்ள, கோப்ரா திரைப்படத்தின் நீளம் அயற்சியை ஏற்படுத்துவதாக கொண்டாடிகள் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், இந்தப் படத்தின் 30 மணித்துளிகளுக்கான காட்சிகள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கோப்ரா. சிறீநிதி செட்டி, மிருளானி ரவி, மீனாட்சி, கே.எஸ்.ரவிக்குமார், இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

லலித்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகப்படியான திரைகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதில், குறிப்பாக படத்தின் நீளம் அயற்சியைத் தருவதாக வெளியான கருத்தாடல் சிறப்பு கவனம் பெறுகிறது.

இதையடுத்து படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முப்பது மணித்துளி காட்சிகள் குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோப்ரா படத்தின் நீளம் 3 மணி நேரம் 3 மணித்துளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படம் எப்படி இருக்கு? பணத்துக்காக உலக நாடுகளில் உள்ள முதன்மைப் புள்ளிகளை கொலை செய்கிறார் விக்ரம். யார் கொலை செய்தார், எதற்காக கொலை செய்தார் என ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கணக்கு போட்டு ஒவ்வொரு ஆளையும் கொலை செய்கிறார்.

இந்தக் கொலைகளை செய்யும் விக்ரமை கண்டுபிடிக்க இபார்ன் பதான் பன்னாட்டு குற்ற ஒழிப்பு காவல் அதிகாரியாக உள்ளே வருகிறார். இபார்ன் பதானுக்கு உதவியாக வருகிறார் மீனாட்சி. கணக்கு வல்லுனர் ஆன மீனாட்சி இந்த அனைத்து கொலைகளுக்கும் முதலீடாக இருப்பது ஒரு கணக்கீடு என்று கண்டுபிடிக்கிறார்.

இதை வைத்து விக்ரம் ஒரு கணிதம் அறிந்த கொலையாளி என்ற பாதையில் விசாரணை செல்கிறது. இது ஒரு புறம் சென்றுகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு புறம் விக்ரமின் பின்னணியில் இருந்து யார் அவரை செயல்படுத்துவது என்பதை உலகிற்கு தெரியப்படுகிறார் ஹாக்கர். இதன்பின் சற்று தடுமாறும் விக்ரமுக்கு அடுத்தடுத்து பல எதிர்பாரா திருப்பங்கள் காத்திருந்தது.

அதை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார். இந்த கொலைகள் எல்லாம் பணத்துக்காக தான் விக்ரம் செய்கிறாரா? புதிதாக கதையில் முளைத்த இந்த ஹாக்கர் யார்? இந்த அனைத்து விடையங்களுக்கும் பின்னணியில் இருக்கும் வில்லன் யார் என்பதே படத்தின் மீதி கதை.. 

விக்ரம் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக காவல் விசாரணை காட்சியில் திரையரங்கத்தை தெறிக்கவிட்டுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு கைதட்டல்களை தன்வசப்படுத்தியுள்ளார் விக்ரம். கதைத்தலைவி சிறீநிதி செட்டியின் வேடம் எதிர்பார்த்த அளவிற்கு கொண்டாடிகளைக் கவரவில்லை என்று பேசப்படுகிறது.

வில்லன் ரோஷன் மேத்திவ்வை வில்லனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் வில்லன் என்று காட்டிக்கொள்ள கண் எதிரில் பார்க்கும் நபர்களை எல்லாம் கொன்று விடுகிறார். இதுதான் வில்லத்தனமா?. மற்றபடி கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், ஆனந்த் ராஜ், மியா ஜார்ஜ், முகம்மது அலி ஆகியோரின் நடிப்பு ஓகே.

இயக்குனர் அஜய் ஞானமுத்து எடுத்துக்கொண்ட கதைக்களம் நன்று. ஆனால், இயக்கமும் திரைக்கதையும் சற்று சொதப்பல் ஆகியுள்ளது. குறிப்பாக படத்தின் முதல் பாதி எப்போது நிறைவடையும் என்ற அளவிற்கு சலிப்பை ஏற்படுத்துகிறது 

அஜய் ஞானமுத்துவுடன் சேர்த்து நீலன் கே.சேகர், கண்ணா சறீனிவாசன், அசாருதீன் அலாவுதீன், இன்னாசி பாண்டியன் மற்றும் பரத் ஆகியோர் படத்தின் எழுத்தாளர்களாக இருந்தும் படத்தின் போக்கில் ஏன் இவ்வளவு தொய்வு என்பது கேள்விக்குறி தான். 

ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும் நன்று. ஆனால், தரங்கிணி மற்றும் தும்பி துள்ளல் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,358.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.