Show all

விசால் தலைமைக்கு எதிராக, தயாரிப்பாளர் சங்கக் கட்டிடங்களுக்கு பூட்டு! பூட்டை உடைக்க முயன்ற விசால் கைது

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, முந்தைய நிர்வாகம் வைத்திருந்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை, விசால் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று கூறி சென்னை தி.நகர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டிடங்களுக்கு சில தயாரிப்பாளர்கள் நேற்று பூட்டு போட்டனர். 

இந்நிலையில் விசால் இன்று தி.நகர் அலுலவலகத்திற்கு வந்தார். விசால் தி.நகர் அலுவலக வாசலில் தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராசுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாவியை வைத்து பூட்டை திறக்கலாம் என்று காவல்துறையினர் கூறியதற்கு விசால் அதை ஏற்க மறுத்து பூட்டை உடைத்தே தீருவேன் என்று மல்லுக் கட்டினார். பூட்டை உடைப்பது சரி அல்ல. அவ்வாறு செய்தால் கைது செய்யப்படும் என்று காவல்துறையினர் கூறியதை விசால் கேட்கவில்லை. பூட்டை உடைக்கும் நோக்கத்தில் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றார். அதனால், காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். 

பூட்டு விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் விசால் பூட்டை உடைக்க முயன்றார். ரூ.7 கோடி வைப்பு நிதிக்கு கணக்கு கேட்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள். மேலும் படங்களை வெளியிடுவதை ஒழுங்குப்படுத்த தொடங்கிய குழுவும் முறைப்படி செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசால் தயாரிப்பாளர் சங்க பக்கம் வந்தே 7 மாதங்கள் ஆகிவிட்டன என்று நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள் தெரிவித்த நிலையில் இன்று அவர் வந்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,007.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.