Show all

குறிஞ்சிநாடன் கொண்டாடிய அறியாமை!

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.  

அறிதோறும் அறியாமை கண்டற்றால் என்பதற்கு புதியதாக ஒன்றை அறியும்போது, அது குறித்த அறியாமை புலப்படுவது போல என்பது பொருள்.

அறியாமைக்கு இணையாகச் சொல்லப்பட்ட சொல் காமம் என்பதாகும்.

அறியாமை போல காமம் புலப்படுகிறது என்று சொல்லப்படுகிறது இந்தக் குறளில். 

அறியாமை புலப்பட்டது எப்போது?
அறிதோறும். 

முன்பு உணர்ந்திருந்த காமம் புலப்படுவது எப்போது?
செறிதோறும். 

செறிதோறும் என்றால் நெருங்கும் போது.

யாரிடம் நெருங்கும் போது சேயிழையிடம்

சேயிழை யார்?
சேயைத் தாங்கியிருப்பவள்

தலைவன் குறிஞ்சி நாடனுக்கும் தலைவி முல்லைமலருக்கும் திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவு பெற்றது. 

ஓராண்டு திருமண நிறைவு நாளில், அன்றைய பகல்பொழுது தலைவன் வீட்டாரும், தலைவி வீட்டாரும் கூடிக்களித்த திருமண நாள் கொண்டாட்டத்தில் திளைத்திருந்தது. 

கடந்த ஓராண்டில்- தலைவி, தலைவனோடு பள்ளியறைப் பாடத்தில் திளைத்திருந்து சேயிழை பட்டம் சூடியதால், அடுத்தமாதம் வளைகாப்பு நடத்தி தலைவியை தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வது குறித்தும் அன்றைய பகல்பொழுதில் கலந்துரையாடப்பட்டது.

தலைவியோடு இருந்தாலும் கூட, அன்றைய இரவு தலைவனுக்குத், தலைவியை சில மாதங்கள் பிரியக் கூடிய ஏக்கத்தையே முற்றாகத் தேக்கியிருந்தது.

தலைவி முல்லைமலர் பஞ்சணையின் பாதிக்கு மேலான பகுதியை நிறைத்திருந்தார். அந்தக்காட்சி மிகச்சில மாதங்களில் தாய்மடி நிறைக்கப் போகிற மகவுக்கு இடக்காப்பு செய்தது போல இருந்தது.

தலைவியோடு ஒட்டி உரசியபடி, திருக்குறள் ஏட்டின் பனை நறுக்குகளை ஒவ்வொன்றாகப் புரட்டி தன் ஏக்கம் தீர்க்கும் வகைக்கு, அகரம் முதலாகக் கொண்ட தமிழுக்கு கடவுள் வாழ்த்து எழுதிய வள்ளுவப் பெருந்தகை ஏதாவது தகவல் வைத்திருக்கிறாரா என்று தேடிக்கொண்டிருந்தான் குறிஞ்சிநாடன்.

அப்போது அவன் பார்வைக்குப் புலப்பட்ட திருக்குறள்:
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.  

கண்டேன் தீர்வு. கண்டேன் தீர்வு என்று மகிழ்ச்சி பொங்க கூவினான் குறிஞ்சிநாடன்.

யாழ! என்னவாயிற்று உங்களுக்கு? அப்படி என்னத்தை கண்டீர்கள் என்று வினவினாள் அரைத்தூக்கத்தில் இருந்த முல்லைமலர்.

சேயிழையின் மகவுதாங்கிய வயிற்றைத் தொட்டு, இந்த அறிவின் வரவு வரை எனக்கு முன்பு அமைந்திருந்த அறியாமையைக் (காமம்) கொண்டாடியிருத்தலே போதும். போதும் என்று மகிழ்ந்து கூறி 
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.  
என்கிற திருக்குறள் அமைந்த ஓலைத்துணுக்கை சேயிழை முல்லைமலரின் கையில் கொடுத்து அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு மகிழ்ந்தான் குறிஞ்சிநாடன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.