Show all

தான் ஒரு முட்டாள் என்பது! 50 ஆண்டுகளுக்கு முன்னால் அன்புள்ள அல்லி சொன்ன விடை. கேட்ட கேள்வி அறிவாளிக்குத் தெரியாதது எது?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், எனது பள்ளி பருவத்தில் புதன் தவறாமல் இராணி கிழமையிதழ் படிப்பது எனக்கு மட்டுமல்ல, எங்கள் குடும்பத்து வழக்கம். ஒரு முறை அன்புள்ள அல்லியிடம், அறிவாளிக்குத் தெரியாதது எது? என்று ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு அன்புள்ள அல்லி அளித்திருந்த விடை: தான் ஒரு முட்டாள் என்பது! இது நடைமுறை உண்மையாக இருப்பதை பல்வேறு சமயங்களில் பலஇடங்களில் கண்டு வியந்திருக்கிறேன். நடுவண் அரசில் அரியணை எறிய இரண்டே நாளில் மோடியின் ஹிந்தித் திணிப்பு அவ்வாறான அறியாமையே.

19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரியணை ஏறிய இரண்டே நாளில், அறியாமையின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக, நடுவண் அரசு, ஹிந்தித் திணிப்புக்காக ஒரு கல்விக் கொள்கையை தயாரித்துள்ளது. இந்தக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது. 
பணப் பரிமாற்றத்திற்கு ரூபாய்தாள் வேண்டாம் எண்ணிம பரிமாற்றம் என்று கணினி தொழில் நுட்பத்தை பாராட்டும் மோடி அரசு- 

வாக்குச்சீட்டு முறை வேண்டாம், மின் வாக்கு பதிவு எந்திரங்களைப் பயன் படுத்தலாம் என்கிற கணினி தொழில் நுட்பத்தை பாராட்டும் மோடி அரசு- 
கூகுள் மொழிபெயர்ப்பில் உலக மொழிகளையெல்லாம் மொழி பெயர்த்துக் கொள்ள முடியும். மேலும் உலக மொழிகள் அனைத்தையும் பேசியவுடனே மொழிபெயர்க்கும் ஏழாயிரம் கருவிகளை கணினி தொழில் நுட்பம் உருவாக்கி வருகிறது. 

அந்தத் துறை சார்ந்து ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன. இரண்டு மொழி, மூன்று மொழிகள் என்ன முப்பது மொழிகள், எண்பது மொழிகள் என்று மொழிபெயர்க்க சந்தையில் ஏராளமான கருவிகள் வந்து விட்டன. அந்தக் கருவியை கையில் வைத்துக் கொண்டு நாம் மோடியிடம் தமிழில் பேசினால், அந்தக் கருவி மோடிக்கு ஹிந்தியில் தெரிவிக்கும். மோடி ஹிந்தியில் தெரிவிக்கும் விடையை அந்தக் கருவி நமக்கு தமிழில் சொல்லும். 

தேவையில்லாமல், தாய்மொழியைத் தவிர்த்து வேறு எந்த மொழியையும் யாரும் விழுந்து விழுந்து படித்து தேர்வெல்லாம் எழுதி சாதிக்கப் போவது எதுவும் இல்லை. 


இந்த இடத்தில் தான் எனது எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் தாமோதரன் ஐயா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. 

ஓர் ஐரோப்பிய விஞ்ஞானி ஆசையாக ஒரு பூனை வளர்த்து வந்தாராம். அந்தப் பூனை விரும்பிய நேரமெல்லாம் வந்து போகும் வகையாக தனது வீட்டுக் கதவில் தச்சரை அழைத்து ஒரு துளையிடச் சொன்னாராம். 

சில மாதங்கள் கழித்து அந்தப் பூனை கருவுற்றதாம். அந்த சமயத்தில் அந்த விஞ்ஞானி மீண்டும் அதே தச்சரை அழைத்து தனது வீட்டுக் கதவில் இன்னொரு சிறிய துளையிடச் சொன்னாராம். அந்தத் தச்சர் அந்த விஞ்ஞானியிடம், நீங்கள் வளர்க்கும் பூனைக்காக கதவில் ஒரு துளை போடச் சொன்னீர்கள். இப்போது இன்னொரு துளை போடச் சொல்கின்றீர்களே அத எதற்காக என்றாராம். ஆதற்கு அந்த விஞ்ஞானி, எனது பூனை குட்டி போட இருக்கிறது அந்தக் குட்டியும் எப்போது வேண்டுமானாலும் வந்து போக வேண்டும் அதற்குதான் பக்கத்தில் இன்னொரு சிறிய துளை என்றாராம். விழுந்து விழுந்து சிரித்த தச்சர், பெரிய துளையிலேயே தாய் பூனையோடு குட்டிப் பூனையும் செல்லும் என்று தெரிவிக்க, எவ்வளவு பெரிய விஞ்ஞானி இது நமக்குத் தெரியாத முட்டாள் ஆகி விட்டோமே யென்று வெட்கப் பட்டாராம். 

அப்படித்தான் கஸ்தூரிரெங்கனும் மோடியும் அறியாமையில் விழுந்தவர்களாக, ஹிந்தித் திணிப்பிற்காக ஒரு கல்வித் திட்டத்தை வகுத்திருக்கிறார்கள். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னாலேயே இந்த வேலையை தொடங்கிய பார்ப்பனிய சக்திகள் இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்திலும் தங்கள் ஹிந்தித் திணிப்பு முடக்கு வாதத்தை தொடர நினைப்பதும் அதற்காக ஒரு வானியல் விஞ்ஞானிக்கு முட்டாள் பட்டம் கட்டியிருப்பதும் மிகப் பெரிய வேடிக்கையாகும். 

எந்த நாட்டுத் தயாரிப்பான எந்த வொரு செல்பேசியும் நமது தாய்மொழியை அங்கீகரித்து நம்மை முன்னெடுக்கிறது. உலக அறிவெல்லாம் கொட்டிக் கிடக்கிற இணையத் தேடலை தொடர கூகுள் நமது தாய்மொழியை அங்கீகரிக்கிறது. ஆனால், நமது வரிப்பணத்தில் நமக்காக இந்திய நாட்டில் அமைகிற அரசுகளுக்கு மட்டும் என்ன கேடு வந்து தொலைத்தது. நமது தாய்மொழியை அங்கீகரிக்க மறுக்கிறது?

தாய் மொழியில்லாமல் இன்னொரு மொழியான ஹிந்தியை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்கிற பிற்போக்குத் தனத்தை மட்டும் பாஜகவினர் விட மறுப்பதன் நோக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,171.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.