Show all

அழுது அடம்பிடிக்கிற குழந்தைகள் கற்றுத்தரும் மந்திரம்

நம்முடைய குழந்தைகள் அழுது அடம்பிடிப்பது, நம்மூலமாக தங்கள் கேட்புகளைக் கடவுளிடம் நிறைவேற்றிக் கொள்வதற்கான மந்திரச் செயல்பாடே என்கிறது, தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட இயல்கணக்கு, என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை. 

27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ் முன்னோர் இயற்கையிடம் இருந்தும் தம் குழந்தைகளிடம் இருந்தும் நிறையக் கற்றனர். அவைகளை இயற்றமிழ் என்ற தலைப்பில் நிறுவியுள்ளனர். இயற்றமிழ் இரண்டு உட்தலைப்புகளைக் கொண்டது. ஒன்று இயல்அறிவு மற்றொன்று இயல்கணக்கு.

இயல் உடையது இயற்கை. இயல் என்பது இயம் என்கிற கோட்பாட்டையும் இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்ளடக்கியது. இயல்அறிவு என்பது இயற்கையின் கோட்பாட்டையும் நடைமுறையையும் அறிதல் ஆகும். இதை ஆங்கிலம் சயின்ஸ் என்கிறது. ஆங்கிலம் சொல்லுகிற சயின்ஸ் நம்மிடம் இயல்அறிவாக பன்னெடுங்காலமாக புழக்கத்தில் இருந்ததை கரிகாலன் கட்டுவித்த கல்லணை நின்று தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

ஆக சயின்ஸ் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்சொல் இயல்அறிவு ஆகும். ஐரோப்பியச் சார்பில் இயங்கும் நம் கல்வியாளர்கள் இன்று ஐரோப்பிய சயின்சை மலைத்து அதை அறிவியல் என்று தமிழ்ப்படுத்துகின்றனர். இது பிழையான முன்னெடுப்பு ஆகும். இது குறித்த விரிவான விளக்கத்தை, 'இயல்அறிவு. அறிவியல். எது சரி? இடமாறு தோற்றப் பிழை வரிசையில்' என்கிற கட்டுரையில் காணமுடியும்.

இயற்கையின் கோட்பாட்டையும் நடைமுறையையும் கணித்தல் என்பதான மூன்று முன்னேற்றக் கலைகளை இயல்கணக்காக நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். அவை 1. சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம். 2. கணியம். 3. மந்திரம் என்பனவாகும். முத்தமிழில் முதலாவது தமிழான உடலசைவுமொழியான  நாடகத்தமிழில் ஒகம் என்கிற ஒரு கலையையும் முன்னெடுத்துள்ளனர் தமிழ்முன்னோர்.

ஓகம் மற்றும் மந்திரம் என்கிற இந்த இரண்டு கலைகளைக் குழந்தைகளிடம் இருந்தே கற்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். அதனாலேயே தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுகிற பாங்குடைய உலகின் ஒரே இனமாக தமிழ்இனம் விளங்குகிறது. உலகின் மற்ற இனங்கள் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும் என்று சிந்தித்திருக்கவில்லை இன்று வரையும் கூட.

மூன்று அகவைக்குள் ஒவ்வொரு குழந்தையும், இயல்பூக்கமாக பெற்றோர் மற்றோரைப் போல 'நடந்து' சாதிக்கும் வகைக்கு செயலால் கடவுளிடம் பதிவிட்டு, பல்வேறு நிலைகளில் ஈடுபட்டு வாகை சூடுகிறது.

குழந்தையின்- மல்லாந்த நிலையில் கை கால்களை ஆட்டுதல், குப்புறக் கவிழ்தல், தவழ்தல், மண்டியிடல், எழுந்து நிற்றல், நடத்தல் ஆகிய நடவடிக்கைகள் ஒன்றுக்கொன்று அடித்தளமாக அமைவதை உற்று நோக்கிய தமிழ்முன்னோர் அந்தந்த நிலைகளை ஓக இருக்கை நிலைகளாக நிறுவி ஓகக்கலையை உருவாக்கினர். இன்றைக்கு பல நிலைகள் கூடுதலாக்கப்பட்டிருப்பது ஓகக்கலையின் தொடர் வளர்ச்சியாகும்.

ஐந்து அகவைக்குள் ஒவ்வொரு குழந்தையும், இயல்பூக்கமாக தன் மனத்திரத்தால் எண்ணமொழியான தமிழை முழுவதுமாக கற்றுத்தேர்வதை உற்று நோக்கிய தமிழ்முன்னோர்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
திண்ணிய ராகப் பெறின்
என்று திருவள்ளுவர் ஒன்னே முக்கால் அடியில் தெரிவிக்கிற செய்தியின் விளக்கமாக மந்திரம் என்கிற கலையை மூன்றாவது முன்னேற்றக் கலையாக நிறுவினர். 

திரம் என்பது திரள், திரட்சி, திரண்டிருத்தல் என்கிற சொற்களில் அமைந்த குவிந்த ஆற்றலைக் குறிப்பதற்கான பொருள் பொதிந்த சொல் ஆகும். திறன் என்பது திறத்தல், திறவுகோல், திறந்திருந்தல் என்று வெளிப்படுகிற ஆற்றலைக் குறிப்பதற்கான பொருள் பொதிந்த சொல் ஆகும். மந்திரம் என்பது மனதில் குவிந்த ஆற்றல் என்ற பொருள் பொதிக்கப்பட்ட சொல் ஆகும். 

தமிழ்முன்னோர் முன்னெடுத்த மந்திரம் குறித்த தெளிவான புரிதல் இன்றி, புரியாத இடங்களைக் கற்பனையால் நிரப்பி, மந்திரத்தை மாயக்கலை என்பதாக பொய்யுரைத்து, பின்தொடர்வோரை குழப்பி வருகின்றனர் அயலியல் வழிகாட்டிகள். 

ஓரறிவு மரத்திலிருந்து ஆறறிவு மனிதன் வரையிலான உயிரிகளின் உள்ளடக்கமாக இருப்பது நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்கள் ஆன இறை ஆகும். இவை இறைந்து காணப்படுகிற பாடுபற்றி இவைகளை இறை என்றனர் தமிழ்முன்னோர். 

ஓரறிவு மரத்திலிருந்து ஆறறிவு மனிதன் வரையிலான உயிரிகள் ஒவ்வொன்றும் கூட்டியக்கமே என்கிற நிலையில் ஐந்தாவது திரமான வெளி அவைகளுக்கு கடந்தும் உள்ளும் அமைகிற பாடுபற்றி வெளியை கடவுள் என்றனர் தமிழ்முன்னோர். 

ஓரறிவு மரத்திலிருந்து ஆறறிவு மனிதன் வரையிலான உயிரிகளும், அவைகளின் உள்ளடக்கமான நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்கள் ஆன இறையும் தான்தோன்றி இயக்கம் கொண்டவை என்பதால் அவை இயங்கும் போது இயக்கமற்ற வெளியானது- இயக்கம் பெற்ற விண்வெளியும், இயக்கம் பெற்று இயக்கம் கொடுத்தவைகளை இயக்கம் கொடுத்த வகைக்கு இயக்கும் விசும்பும் என கடவுள் மூன்று நிலைகளை எய்திட பாடாற்றி தம்முடைய தலையெழுத்தை தாமே எழுதிக் கொள்கின்றன ஓரறிவு மரத்திலிருந்து ஆறறிவு மனிதன் வரையிலான உயிரிகள், சிறப்பாக மனிதன்.

கடவுளிடம் செயல், எண்ணம் மற்றும் தமிழால் ஒவ்வொரு தற்பரை நேரமும் (60 தற்பரை 1 விநாழி) நமது இயக்கத்தை நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மேற்கண்ட செய்திகளால் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பதிவு வகைக்கே நமது வாழ்க்கை செழுமைப்படுகிறது.

நேரடியாக கடவுளிடம் செயலால் நடக்கக் கற்ற குழந்தை, நேரடியாக கடவுளிடம் எண்ணத்தால் தமிழ் கற்ற குழந்தை வளர்ந்த நிலையில், கடவுளிடம் கேட்டுப்பெற வேண்டியதை பெற்றோர் வழியாக பதிவிட வேண்டிய சூழல் அமைகிறது. குழந்தைகள் விரும்பிய சிலவற்றை, பெற்றோர் மகிழ்வோடு வாங்கித் தருவதும் மறுப்பதும் கடவுளில் பதிவாகி இருவருக்கும் அந்தப் பதிவு வகைக்கு கேட்பு, மறுப்பு நிறைவேறுகிறது.

குழந்தையின் எதிர்காலத்தில் அது பெற்றோருக்குத் தந்த பேறு: 
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்.
மற்றும்,
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
என்கிற திருக்குறள்கள் சுட்டும் வகையாக அமைகிறது. 

குழந்தைகள் பெற்றோர்கள் மூலமாக கடவுளிடம் கேட்டதும், பெற்றோர் நிறைவேற்றம் மூலம் கடவுளிடம் பதிவிட்டதும் இருவருக்குமான விதியாக அமைகிறது என்பதை 
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
என்கிற திருக்குறள் தெளிவாக விளக்குவதாகிறது. 

பிள்ளைகள் நேரடியாக கடவுளிடம் கேட்ட நடத்தலும், தமிழ் கற்றலும் எளிதாக நடைந்தேறியது போலவே நம்-மூலமாக குழந்தைகள் கேட்கிற அனைத்தும் எளிதாக அமையும் என்றெண்ணி, அமையா நிலையில் குழந்தைகள் முன்னெடுப்பது அழுதலும் அடம் பிடித்தலும் ஆகும். 

குழந்தைகள் அழுது அடம் பிடிப்பது பிழையானதொன்றல்ல. நாம் மறுப்பதும் பிழையானது அல்ல. ஆனால் மறுப்பு ஏன் என்று ஆற்றுப்படுத்தா நிலையில் குழந்தை நம்மை தகவிலார் என்று கடவுளில் பதிவிட்டு, பதிவிட்ட நிலைக்கு அதுவும்- பாதிப்போ மதிப்போ பெறுகிறது.

ஆற்றுப்படுத்திய நிலையில், தனக்காக மட்டும் அல்லாது உங்களுக்காகவும் உங்கள் பிள்ளை கடவுளிடமும் அழுது அடம்பிடித்து நிறைவேற்றலுக்கு விதி எழுதும். 

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்.
மற்றும்,
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
என்ற வகைக்கு உங்களுக்கு பேறு தந்து, நீங்கள் தக்கவர் என்று நிலைநாட்டும் உங்கள் எச்சமான உங்கள் பிள்ளை. 

நாமும் நமக்குத் தேவையானதை நமது குலதெய்வங்களிடம் அழுது அடம்பிடித்து கேட்டதை கடவுளிடம் இருந்து நாம் பெற்றுவிட முடியும் என்று புரிந்து கொள்வதற்கான மந்திரமே குழந்தைகளின் அழுதலும் அடம் பிடித்தலும் என்று தெளிவோமாக.

கடவுள் ஒன்று. அது வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடையது. இயக்கம் அற்ற 'வெளி' நிலைக் கடவுளை நம்மை இயக்கும் வகைக்கு 'விசும்பு' நிலைக் கடவுளாக உருவாக்கியது நாம் என்பதால், கடவுள் நம்முடைய சேயோன் என்கிறது தமிழ்முன்னோர் நிறுவிய இயல்கணக்கு.

செயல் மற்றும் எண்ண நிலையில் இருந்து 'தமிழ்' (எண்ணமொழி) நம்மால் உருவாக்கப்படுவதால் அதுவும் நம் சோயோன் ஆகும்.

நம்மால் உருவாக்கப்படும் நம் பிள்ளைகளும் நம்சேயோன் ஆகும். சோயோன் நம்மால் இயக்கம் பெற்று நம்மை இயக்குவது ஆகும். ஆகவே 
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

இன்றைய பெரும்பாலான தமிழ்மக்கள், அழுது அடம்பிடித்து கேட்க உரிமையுள்ள குலதெய்வங்களைக் கொண்டாடுவதேயில்லை. மாறாக அயல்வழிகாட்டிகளைப் பின்தொடர்ந்து, தங்களுக்கான தலையெழுத்தை யாரோ எழுதித்தர முடியும் என்று பிழையாக நம்பி, காலத்தை வீணடித்து, நம்முடைய தலையெழுத்தை எதுவோ, யாரோ பிழையாக எழுதுவதாக புலம்புதலை மட்டுமே முன்னெடுத்து அந்தப் புலம்புதலே நமது வாழ்க்கையில் நிலைத்திருக்கும் வகைக்கு விதியெழுதிக் கொள்கின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,461.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.