Show all

எளிதாகக் கிடைத்துவிடும் மாற்றமும் முன்னேற்றமும்! நம்முடைய வாழ்க்கை பற்றி நாம் கொண்டிருக்கிற கணிப்பை மாற்றிக் கொண்டாலே

23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125.

1. நான் 27 அகவை இளைஞன், எனக்கு இரவில் தூக்கம் வராமல் மனம் ஏதாவது ஒன்றை உருவாக்கி அதை பற்றி தேவையில்லாத நினைவுகளால் என்னை தூங்க விடாமல் செய்கிறது. இந்த எண்ணத்தைச் சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?
2. இறப்பை நினைத்து எப்போதும் அச்சமாக இருக்கிறது. பேருந்தில் காரில் இப்படி பயணம் செய்யும் போதும் ஏதாவது ஆகுமோ என்று தோன்றுகிறது. வீட்டுக்குள்ளே அஞ்சி வாழ்கிறேன். இந்த அச்சத்தை எப்படி போக்குவது?
3. நான் ஒரு உள்முக சிந்தனையாளர். ஒரு நிமிடத்திற்கு மேல் பேசினாலோ அல்லது வாசித்தாலோ சோர்வு ஏற்பட்டு தூக்க நிலைக்கு செல்கிறேன். இயல்அறிவு (சயின்ஸ்) பாடான காரணம் மற்றும் தீர்வை கூற முடியுமா?
4. நான் ஒரு ஆணாக, ஒரு பெண்ணின் திமிருக்கு முன்னாடி என்னால் ஒன்றும் பேச (செய்ய) முடியவில்லை, அவளைப் பார்க்கும் பொழுது ஒரு வித அச்சம் என்னை பற்றி கொள்கிறது. அவளிடம் நான் ஒரு அடிமை போல் இருக்கிறேன், இதை எப்படி மாற்ற?
5. கொரோனா வருவதை எந்த சோதிடரும் கணிக்கவில்லை வந்த பின்பு எந்தத் தெய்வமும் மனிதனை இறப்பில் இருந்து காக்கவில்லை அப்போது எங்கே அந்தத் தெய்வங்கள்? எதற்காக சோதிடம்?

நான் கேள்வித்தளத்தில் ஐந்து மணித்துளிகளுக்குள் தேடியெடுத்த ஐந்து வினாக்கள் இவை.
இந்த வினாக்களை மேலோட்டமாக மட்டும் படியுங்கள். வினாவுக்குள் நுழைந்து விடைதேட வைப்பது கட்டுரையின் நோக்கம் அல்ல.

ஒவ்வொரு கேள்வியாளரும் தங்களின் வேறுவேறு வகையானதொரு சிக்கலை வினாவாக்கியுள்ளார்கள், என்பதைத் தெரிவிப்பதற்கானதே நாம் எடுத்துக்கொண்ட இந்த வினாக்கள்.

அவர்கள் வாழ்க்கை பற்றி அவர்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கிற வாழ்க்கை பற்றிய கணிப்பே இந்த வினாக்களில் பொதிந்துள்ள தகவல்.

இந்தச் சிக்கல் ஒவ்வொன்றும் அவர்களுக்கு அப்பாற்பட்டு கிடைத்த சிக்கலாகவே ஒவ்வொருவரும் கருதியுள்ளனர்.

அது உண்மையல்ல! இந்தச் சிக்கல் ஒவ்வொன்றும் தமக்குத் தாமே ஏதோ சில பல பட்டறிவின் அடிப்படையில் கணித்துக் கொண்ட தங்கள் தங்கள் வாழ்க்கை பற்றிய கணிப்பே ஆகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கணியன் பூங்குன்றனார், 
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று தமிழ்முன்னோர் பட்டறிவில் இருந்து தெளிவாக விளக்கியுள்ளார்.

அதன் அடிப்டையை விளங்கிக் கொள்ள முயல்வோம்.
முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவியுள்ளார் தமிழ்முன்னோர் பட்டறிவில் இருந்து தொல்காப்பியர்.

அந்த 'இடத்தில்' 'காலம்' என்கிற, நிலம் நீர் தீ காற்றால் உருவான அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்முன்னோர் முதலென நிறுவிய இடம் மற்றும் காலத்தில்- காலத்தின் உள்ளடக்கம் நீங்களும் நானும், இந்தக் கேள்வித்தள கேள்வியாளர்களும்.

'இடம'; என்கிற கடவுள், 'காலம்' என்கிற அனைத்தையும் ஒருங்கிணைத்து முயக்கிக் கொண்டிருக்கிறது. 
'காலம்' என்கிற அனைத்திற்கும் எல்லையும், தான்தோன்றி இயக்கமும் உண்டு. 

'இடத்திற்கு' எல்லையோ, தான் தோன்றி இயக்கமோ கிடையாது. நாம் அதில் இயங்குவதால், அந்த இயக்கத்தால், அது இயக்கம் பெற்று, வெறுமனே வெளியாக இருந்த கடவுள், 1வெளி, 2விண்வெளி, 3விசும்பு, என்கிற மூன்று நிலைகளை அடைந்து நம்மை முயக்குகிறது.

கடவுள் படைப்பாளி அல்லவே அல்ல. கடவுளுக்குத் தான்தோன்றி இயக்கம் இல்லவே இல்லை. நாம் கொடுக்கிற இயக்கத்தைப் பெற்று அந்த இயக்க வகைக்கு நம்மை முயக்குவதே கடவுளின் வேலை ஆகும்.

ஆக தங்கள் வாழ்க்கை பற்றி மேற்கண்ட ஐந்து கேள்வியாளர்களுக்கும், மக்களில் எண்பது விழுக்காடு பேர்களுக்கும் எழுகிற வாழ்க்கை பற்றிய கணிப்பு கடவுள் கொடுத்தது அல்லவே அல்ல.

தங்களுக்குத் தாங்களேயும், தாங்கள் ஒப்புக்கொடுத்த தனிமனிதர்கள், உறவுகள், நட்புகள், தனிமனிதச் சான்றோர்கள், வழிகாட்டிகள், அமைப்புகள், மதம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கியதும் கொடுத்ததும் ஆகும்.

உங்கள் வாழ்க்கை பற்றிய கணிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சிக்கலில் இருந்து வெளிவர: எளிதாகக் கிடைத்துவிடும் நல்லதொரு பாதை! உங்களுடைய வாழ்க்கை பற்றி நீங்கள் கொண்டிருக்கிற கணிப்பை மாற்றிக் கொண்டால்.
உங்கள் வாழ்க்கை பற்றிய கணிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சிக்கலில் இருந்து வெளிவர: உங்கள் தேவைகள் என்னென்ன என்று பட்டியல் இடவேண்டும். அவை குறித்து மட்டுமே சிந்திக்கவும் பேசவும் எழுதவும் வேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,762.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.