Show all

பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்த சிங்கள ராணுவம்

இலங்கையில் தமிழ்ப் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்கள ராணுவத்தினரை தண்டிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

     விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

     ஈழப்போரின் போது ராஜபக்ச ஆட்சியின்போதும் அதன்பின்னர் அமைந்த மைத்ரிபால சிறிசேன அரசின்கீழும் கைதுசெய்யப்பட்ட, மற்றும் சரணடைந்த தமிழ்ப் பெண்களைச் சிங்கள ராணுவத்தினர் பல்வேறு முகாம்களில் அடைத்துவைத்து பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மை இப்போது வெளியாகியுள்ளது. இந்தக் கொடுங்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை தண்டிப்பதற்கு இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

     ஐநா அவையின்

‘பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் குழுவின்’  முன்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின்’ சார்பில் 55 பெண்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் நாற்பத்தெட்டு பேர் ராஜபக்ச ஆட்சியின்போது கைதுசெய்யப்பட்டவர்கள், ஏழு பேர் தற்போது நடைபெறும் சிறிசேனவின் ஆட்சியில் கைதுசெய்யப்பட்டவர்கள்.

 

 

 

     வாக்குமூலம் அளித்திருக்கும் 29 பெண்கள் பலவந்தமாக வாகனங்களில் கடத்தப்பட்டு கண்கள் கட்டப்பட்டு அடையாளம் தெரியாத இடங்களில் அடைத்துவைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பத்து பேர் மறுவாழ்வு முகாம்களிலிருந்து கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். தம்மை அடைத்து வைத்திருந்தவர்களுக்கு லஞ்சம் கொடுத்தே இந்தப் பெண்கள் தப்பித்து வந்துள்ளனர். இந்தக் கொடுமைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களும் சாட்சிகளின் வாக்குமூலங்களோடு இணைத்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

     தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்தக் கொடுமை இனப்படுகொலையைவிட மோசமானது. இப்போதாவது சர்வதேச சமூகமும் ஐநா அவையும் இலங்கை போர்க்குற்றங்களிலும் இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்கள ராணுவத்தினரைக் கைதுசெய்து தண்டிக்கவேண்டும் என இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

     இவ்வாறு அந்த அறிக்கையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

     குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதற்கு உலகளாவி வேறு வகையான முயற்சி ஏதாவது செய்தால் அன்றி, திருமாவளவன் கோரிக்கையை வழிமொழிவதால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற மாதிரி ஏதாவது நடந்து விடக் கூடும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.