Show all

சூரியனுக்கு அனுப்பவிருந்த செயற்கைகோள் நிறுத்தம்! 20 லட்சம் டாலர்கள் செலவில் நாசா உருவாக்கியது

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன் குறித்த வியத்தகு தகவல்களை திரட்டிவர ஹீலியோஸ்1 மற்றும் ஹீலியோஸ்2 செயற்கைக்கோள்களை ஜெர்மனியும், அமெரிக்காவும் கூட்டாக விண்ணில் செலுத்தின.

புவியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு சென்ற இந்த செயற்கைக்கோள்கள் சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்து தான் ஆய்வு செய்ய முடிந்தது.

இதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற விஞ்ஞானிகள் நம்பிக் கொண்டிருக்கிற சூரிய புயல் தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை.  அனுப்பி சில ஆண்டுகள் சில தகவல்களை அனுப்பிய இந்த செயற்கைக் கோள்கள் பின்னர் செயலிழந்து சூரியனின் சுற்றுவட்ட பாதையில் நிறுத்தப் பட்டுள்ளன.

இதற்கிடையில், நாற்பது லட்சம் மைல்கள் தொலைவில் ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனை மிக அருகில் சென்று ஆய்வு செய்ய முடியும் என்று கூறி, பார்க்கர் சோலார் புரோப் எனும் செயற்கைகோளை 20 லட்சம் டாலர்கள் செலவில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யமான நாசா உருவாக்கியுள்ளது.

இந்த ஆய்வு திட்டத்துக்கு சூரியனில் ஏற்படும் புயல்கள் பற்றி 60 ஆண்டுகளுக்கு முன்னர் கணித்து கூறிய யூகேன் பார்க்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு, அமெரிக்க நேரப்படி சனிக் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் செலுத்த நாசா நேரம் குறித்து இருந்தது.

சூரியன் மற்றும் சூரியப் புயல் அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களைச் சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறந்து, சுமார் 1,400 செல்சியஸ் வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக் கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டதாகக் கூறப்படுகிறது. சூரியனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இந்த செயற்கைகோள் அதீத தட்ப வெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டதாம். மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், விண்ணில் செலுத்து வதற்கான இறங்குமுக நேரத்தில் வெறும் ஒரு நிமிடம் 55 வினாடிகள் மிச்சமிருந்த நிலையில் இந்த செயற்கைகோளை சுமந்து செல்லும் டெல்ட்டா-4  ராக்கெட்டை உந்திசெலுத்தும் எரிசக்தியான ஹீலியம் கொள்கலத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டது, கணினிகளின் எச்சரிக்கை ஒலியால் தெரியவந்தது. இதை தொடர்ந்து, பார்க்கர் சோலார் புரோப் செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப் பட்டது. இந்த குறைபாடு சீரடைந்த பின்னர் விரைவில் விண்ணில் ஏவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,879.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.