01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 அகவை சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் தனது கால்நடைகளுக்கு புற்கள் அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதிக்குள் வந்த முதலை ஒன்று சுகிட்டோவின் காலைக் கடித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க நினைத்த சுகிட்டோ முதலைப் பண்ணைக்குள் ஓடியபோது, மற்ற முதலைகளால் தாக்கப்பட்டு, கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து சுகிட்டோ உறவினர்கள், அப்பகுதி மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்து, பண்ணை நிர்வாகத்திடம் பேசினார்கள். இதில் பண்ணை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி காவல்துறையிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். முதலையின் தாக்குதலால் பலியான சுகிட்டோவுக்கு இழப்பீடு தருவதாக பண்ணை உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், சுகிட்டோவின் இறுதிச்சடங்கு இன்று நடந்து முடிந்தது. இறுதிச் சடங்கை முடித்துவிட்டு, கையில் கத்தி, கம்பு, கூரிய ஆயுதங்களுடன் புறப்பட்ட அப்பகுதி மக்கள், முதலைப்பண்ணைக்குள் புகுந்தனர். முதலைப் பண்ணையில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் தடுத்தும், கிராம மக்கள் கேட்கவில்லை. பண்ணைக்குள் இறங்கி, அங்கிருந்த 300-க்கும் மேற்பட்ட முதலைகளை தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்து கொலை செய்தனர். தங்களின் உறவினரை கடித்துக் குதறிய முதலைகளை பழிக்குப்பழிவாங்கும் வகையில், முதலைகளைக் கொன்று குவித்துவிட்டு அப்பகுதி மக்கள் சென்றனர். இதில் 4 அங்குல குட்டி முதலைகள் முதல் 2 மீட்டர் வரை வளர்ந்த பெரிய முதலைகள் வரை தப்பவில்லை. அனைத்து முதலைகளையும் தேடிப்படித்து வெட்டிசிதைத்துவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றனர். இது குறித்து பண்ணை நிர்வாகத்தினர் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட காவல்துறையினர் முதலைகள் கொல்லப்பட்டு குவியலாகக் கிடக்கும் காட்சியைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சோராங் மாவட்ட காவல்துறை தலைவர் தேவா மேட் சிதான் சுதர்ஹனா கூறுகையில், முதலைகளை வெட்டிக்கொன்றவர்களை நேரில் பார்த்தவர்கள் சாட்சி அளிப்பதாகக் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில், விசாரணை நடத்தி, விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,851.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



