இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவராக கருதப்பட்டாலும்- நித்தியானந்தா அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வெளியில் என்னென்னவோ செய்து கொண்டுதாம் இருக்கிறார். 07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கைலாசா நாட்டில் தனது உணவகக் கிளையைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த கோயில் நகர உணவக உரிமையாளர் குமார் என்பவர் நித்யானந்தாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் கைலாசா நாட்டுக்கு தனி இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், நித்தியானந்தா அமர்ந்திருப்பது போல் தனிக்கொடி, தேசியப் பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம் என ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்தும் பதிவிடப்பட்டுள்ளன. அந்த தீவு நாட்டுக்கு நித்யானந்தா தான் தலைமைஅமைச்சர் என கூறப்படுகிறது. இந்த கைலாசா தீவு தென் அமெரிக்காவின் ஈக்வெடார் அருகே இருப்பதாக தெரிகிறது. இதனிடையே, கைலாசா நாட்டுக்கான கட்டுப்பாட்டு வங்கி தொடங்கப்பட்டுள்ளதாக காணொளிப் பதிவின் மூலம் தெரிவித்த நித்யானந்தா, தனது நாட்டுக்கான நாணயத்தை தங்கத்தில் தயாரித்து நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பேரறிமுகமான மதுரை கோயில் நகர உணவக உரிமையாளரும், மதுரை மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார், கைலாசா நாட்டில் தனது கோயில் நகர உணவகக் கிளையை நிறுவுவதற்கு நித்யானந்தா அனுமதி தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, கைலாசா அங்கீகரிக்கப்பட்ட பிறகு தங்களின் உணவகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உணவக உரிமையாளர் குமாருக்கு நித்யானந்தா பதிலளித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவாகி விட்டார் நித்தியானந்தா. அதன்பின்னர், தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு, தனி நாடு தகுதிப்பாட்டிற்காக அவர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.