அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய எச்சத்தினர்கள் நான்கு பேர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். 20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து 5 இந்திய எச்சத்தினர் பாரளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் 4 பேர்கள் பேரரளர்கள் அவை என்று அழைக்கப்படுகிற கீழவை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். அவர்கள், மருத்துவர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் ஆவார்கள். ஆட்சி அவை (செனட் அவை) என்று அழைக்கப்படுகிற மேலவையில் கமலா ஹாரிஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர்கள் அனைவரும் செல்லமாக ‘சமோசா காகஸ்’ என்று அழைக்கப்பட்டு வந்தனர். இவர்களில் கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். எஞ்சிய 4 பேரும் மீண்டும் நாடாளுமன்ற பேராளர்கள் அவை தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்ற பேரளர் அவைக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். மருத்துவர் அமி பெரா (அகவை 55), கலிபோர்னியா மாநிலத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் தொடர்ந்து 5-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் பஸ் பேட்டர்சன் தோற்றுப்போனார். ரோகன்னா (44), கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் போட்டியிட்ட மற்றொரு இந்திய எச்சத்தினரான ரிதிஷ் தாண்டன் தோல்வி அடைந்தார். ராஜா கிருஷ்ணமூர்த்தி (47), இல்லினாய்ஸ் மாகாணத்தில் 8-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றிருக்கிறார். லிபர்டேரியன் கட்சி பிரஸ்டன் நெல்சன் தோல்வியைத் தழுவினார். ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழ்நாட்டினர். பிரமிளா ஜெயபால் (55), வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற குடியரசு கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லர் தோல்வி அடைந்தார். பிரமிளா ஜெயபால் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் ஹிரால் திப்பிர்னேனி என்ற இந்திய வம்சாவளி பெண் மருத்துவர், அரிசோனாவில் 6-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து பேராளர்கள் அவைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார், அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டேவிட் ஸ்வெய்கெர்ட் தோல்வி அடைந்தார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் உறுதியானால், மருத்துவர் ஹிரால் திப்பிர்னேனி, பேராளர்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய எச்சத்தினரில் 2-வது பெண் என்ற சிறப்பை பெறுவார். ஓகியோ மாநில ஆட்சி அவைக்கு இந்திய வம்சாவளி நீரஜ் அந்தானி (29) குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் மார்க் போகலை வீழ்த்தி இருக்கிறார். ஓகியோ மாநில ஆட்சிஅவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய எச்சத்தினர் இவர் என்பது சிறப்பு. இதே போன்று நியூயார்க் மாநில சட்டஅவைக்கு இந்திய வம்சாவளி வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தினார். இந்த மாநில பேராளர் அவைக்குத் தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பு, இவருக்கு கிடைத்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



