Show all

வேட்பாளரை மாற்றக் கோரி அதிமுக தொண்டர்கள் போராட்டம்!

அதிமுகவில் பாஜக கூட்டணியை கீழ்மட்டத் தொண்டர்கள் யாரும் விரும்பவேயில்லை. தங்கள் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்று பெரும்பாலான தொண்டர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

01,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கட்சிக்குள்ளே பல சர்ச்சைகள் போராட்டங்கள் வெடிக்க அதிமுக நிருவாகம் காரணமாகியுள்ளது. அதிமுகவில் பாஜக கூட்டணியை கீழ்மட்டத் தொண்டர்கள் யாரும் விரும்பவேயில்லை. தங்கள் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்று பெரும்பாலான தொண்டர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதுமட்டும் அல்லாமல் தொண்டர்களை மதிக்காத தலைவர்கள் வேட்பாளாராக நிறுத்தப்பட்டிருப்பதிலும் பல தொகுதிகளில் தொண்டர்களிடம் வெறுப்பு காணப்படுகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி தனி தொகுதி வேட்பாளராக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளரும் ,வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இயக்குநருமான செந்தில்குமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை அதிமுக தலைமையிடம் இருந்து வெளியானதிலிருந்து கள்ளக்குறிச்சியில் போராட்டம் வெடித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி தனி தொகுதி வேட்பாளராக அழகுவேல் பாபுவை அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர் .அதில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் 3வது நாளாக நேற்றும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அழகுவேல் பாபுவை கள்ளக்குறிச்சி தனி தொகுதி சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களால் சென்னை, திருவண்ணாமலை சேலம் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன் வேட்பாளரை மாற்றாவிட்டால் நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகி விடுவோம் என்று கூறி போராட்டம் நடத்திவருகிறார்கள் கள்ளக்குறிச்சி நகர நிர்வாகிகள்.

போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு கள்ளக்குறிச்சி காவல்துறை கண்காணிப்பாளர் ராமநாதன் கூறிய நிலையில் அதை காதில் போட்டுக் கொள்ளாத கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்தச் சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பெண்கள் உட்பட 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.