18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: வந்தே விட்டது! 'காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை பதிகை செய்திட நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் அறிவித்த நாள். ஆம் நாளை மறுநாள் பதிகை செய்ய வேண்டும். ஆறு கிழமை அவகாசத்தை வீணே கழித்து விட்டு திட்டத்திற்கு பொருள் தெரியவில்லை என்று கதை விட்டது நடுவண் அரசு. நாளை மறுநாள் சொல்வதற்கு என்ன கதை கட்டி வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. இதற்கிடையில் இரண்டு கிழமைகாலம் அவகாசம் என்று ஒரு நூலும் விட்டு பார்த்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, வழக்கறிஞர் புகழேந்தி, நடிகை கஸ்தூரி, கௌசல்யா சங்கர் மற்றும் பல இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், அந்தந்த இயக்கங்களின் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், சல்லிக்கட்டுக்கடற்கரைக்குள் (மெரினா) சென்றுவிடாமல் தடுக்க சுமார் 2,000 க்கும் அதிகமான காவல்துறையினர் ஆர்ப்பாட்டக் களத்தைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், சல்லிக்கட்டுக்கடற்கரையும் காவலர்களால் நிறைந்திருந்தது. இதுதவிர, சிறப்பு அதிரடிப்படைப் பிரிவு காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். சாதாரணமாகக் கறுப்புச் சட்டையில் வந்தவர்கள், ஐந்து பேருக்கு மேல் செல்பவர்கள் என அனைவரையும் சோதனை செய்த பின்னரே காவல்துறையினர் சல்லிக்கட்டுக்கடற்கரைக்குள் அனுமதித்தனர். ஆர்ப்பாட்டத்துக்குக் காவல் துறை ஒருமணி நேரம் மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரை வாழ்வுரிமைக் கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, வேண்டும் காவிரி. வேண்டாம் ஸ்டெர்லைட் என்ற முழக்கங்கள் ஒலிக்கப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக வாழ்வுரிமைக் கூட்டமைப்புத் தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை நடத்தும் என்று இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,774.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.