25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் விஜி அகவை38 திருநங்கையான இவர், சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அன்பு அறக்கட்டளை, என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் தென்மண்டல பிரதிநிதியாகப் பணியாற்றினார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ராஜீவ் காந்தி சட்டக் கல்லூரியில் சேர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன் சட்டம் பயின்று முடித்தார். ஆனால், பார் கவுன்சிலில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் ஓராண்டு தாமதத்துக்குப் பின்னர் முந்தாநாள் இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்தார். அதன் பிறகு தொடர் வண்டிமூலம் விஜி நேற்று தூத்துக்குடி வந்தார். தொடர் வண்டிநிலையத்தில் சக திருநங்கைகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது விஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 ஆண்டுகளாக சிரமப்பட்டு உழைத்து தான் தற்போது வழக்கறிஞராகி இருக்கிறேன். திருநங்கைகள் என்றால் சமுதாயத்தில் ஒரு விதமான அவப் பெயர் இருக்கிறது. அதனை மாற்ற நாம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதலில்தான் சட்டம் படிக்க ஆரம்பித்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அறங்கூற்று மன்றத்தில் முதன்முதலாக என்னை உறுப்பினராக சேர்த்தார்கள். அதுதான் முதல் உந்துதல். அப்போது மக்கள் அறங்கூற்று மன்ற தலைவராக இருந்த குருவையாதான் சட்டம் படிக்க என்னை தூண்டினார். எங்களைப் போன்றவர்கள் படிக்கிறார்கள் என்றால், தகுந்த வழிகாட்டுதலை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அந்த மாதிரி வழிகாட்டுதல் இல்லாததால்தான், நான் படித்து முடித்து ஓராண்டு ஆகியும் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்த மாதிரி தடைகள் வரும்போது மனது சோர்வாகிவிடுகிறது. அடுத்து வருபவர்களுக்காவது அரசு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும். என்னை போன்ற திருநங்கைகளுக்கு உந்துதலாக இருக்க விரும்புகிறேன். நிறைய பேர் ஆளுமைபணித்துறை, காவல்பணித்துறை படிக்க வேண்டும். சமூகம் சார்ந்த பணிகளில் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். சமூகம் என்னை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை, சமுதாயத்தை நான் நேசிப்பேன் என்றார் அவர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,843.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



