25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் இந்த ஆண்டிற்கான தியேல் ஊக்கவிருது, சென்னையைச் சேர்ந்த 21 அகவை மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையிலும் மும்பையிலும் இளமைக் காலத்தை கழித்த அபர்ணா, பள்ளிப்படிப்பிலேயே சாதனை புரிபவராக விளங்கினார். கணிதத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்; மேலும் படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார். ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் சங்கத்தில் முன்னோடியாக திகழ்ந்த இவர், இந்த தொழில் நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டார். மேலும் ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தையும் (மெக்கானிசம் லேப்) இவர் ஏற்படுத்தினார். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக் செயின் பயிற்சி அளித்துள்ளார். தற்போது தியேல் அறக்கட்டளை ஊக்கவிருதைப் பெறுவதன் மூலம், உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார். இளம் அகவையிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும், சிறந்த பெரிய வழிமுறைகளைக் கண்டறியும் திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊக்கவிருது வழங்கப்படுகிறது. பே பால் நிறுவனத்தின் இணை நிறுவனரும், முகநூல் அமைப்பின் தொடக்க கால முதலீட்டாளருமான பீட்டர் தியேல் என்ற கோடீஸ்வரரின் ஆதரவுடன் ஒரு தனியார் அறக்கட்டளையாக தியேல் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் ஊக்கவிருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் உதவித் தொகையும், தியேல் அறக்கட்டளையைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் வழிகாட்டுதலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,843.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



