தலைமைச் செயலகத்திலிருந்து நான் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறேன். 60 கோடி ரூபாயோ, 500 கோடி ரூபாயோ, இன்னும் எத்தனை கோடி தேவையோ அதையனைத்தையும் செய்து கொடுப்பதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார். பொதுமக்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பை மட்டும்தானே கேட்கிறோம். ஒத்துழைப்புக் கொடுங்கள், வீட்டிலேயே இருங்கள், கவனமாக இருங்கள், வெளியே வராதீர்கள் நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகமக்களுக்கு அன்பான உருக்கமான வேண்டுகோள். 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சட்டப்பேரவையில் நலங்குத்துறை மானியக் கோரியக்கையின் மீது ஆற்றிய உரை: நமது முதல்வர் தாயுள்ளத்தோடு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து நடவடிக்கைகளையும் ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்தி வருகிறார். கரோனா தொடர்புடைய பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கக்கூடிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், காவல் துறை, பேரிடர் மீட்புத் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் தங்களுடைய உயிரை துச்சமென கருதி, தங்களை இரவு பகலாக முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் களத்திலே நின்று இன்றைக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, இனி என்றைக்கும் பணியாற்றக்கூடிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் யாருக்காக புதிய புதிய அறிவுப்புகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்? இந்த நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கடைக்கோடியில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த தமிழினத்திலே இந்த நோய்த் தொற்று வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்பதைத்தான் அது காட்டுகிறது. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும். முதல்வருடைய இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்களுடைய ஒத்துழைப்பு வேண்டும். உலக அளவில் 186 நாடுகளில் இந்த நோய் பரவியிருக்கிறது. உலகத்தையே மிகப் பெரிய அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்றுவரை பரிசோதனை செய்யப்பட்டதில், 3 லட்சத்து 32 ஆயிரத்து 970 பேர் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். 14 ஆயிரத்து 510 பேர் இறந்திருக்கிறார்கள். இத்தாலியில் ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இறக்கக்கூடிய நிலை இருக்கிறது. இந்தியாவில் 443 பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 9 பேர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நோய் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதற்கு ஒரேயொரு கருத்தைச் சொல்கிறேன். பொதுமக்கள் எந்த அளவுக்கு விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக:- உகானில் முதலில் 250 பேருக்கு இருந்தது. 15 நாட்களில் 13 ஆயிரம் ஆனது. அடுத்த 15 நாட்களில் 61 ஆயிரம் ஆகிவிட்டது. அடுத்த 15 நாட்களில் 81 ஆயிரம் ஆகிவிட்டது. இத்தாலியில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சுழிய நிலையில் இருந்தது, 3 இருந்தது, 4 இருந்தது, 15 நாட்களில் 3,000 ஆக இருந்தது, அடுத்த 15 நாட்களில் 41 ஆயிரம் வந்துவிட்டது. ஈரானில் தொடர்ந்து நோய் பாதிப்பு இல்லை, சுழியம்; என்று புள்ளிவிவரம் போட்டவர்கள், 2,922 என்ற ஒரு புள்ளி விவரம் வெளியிட்டார்கள். அடுத்த 15-வது நாளில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு என்ற புள்ளிவிவரம் வந்துவிட்டது. அமெரிக்காவில் சுழியமாக இருந்தது, 11 ஆக இருந்தது, 15 ஆனது, அதன்பின் 129 என்று எண்ணிக்கை சொன்னார்கள். நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று சொன்னார்கள். வல்லரசு நாடான அமெரிக்காவையே அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய அளவுக்கு பத்தே நாட்களில் 10 ஆயிரத்து 442 பேருக்கு வந்துவிட்டது. இது அரசினுடைய உத்தரவு. ஏற்றுத்தான் ஆகவேண்டும். இன்றைக்கு 12 ஆயிரத்து 519 பேர் வெளிநாட்டிலிருந்து பயணம் செய்து வந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டுமென்று அரசு சொல்கிறது. மிகவும் பணிவாகச் சொல்கிறோம், அன்பாகச் சொல்கிறோம், சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம். உங்களிடமிருந்து சமூகப் பரவல் வந்துவிடக்கூடாது. உங்களிடமிருந்து உங்கள் மனைவிக்கு வந்துவிடக் கூடாது. உங்களிடமிருந்து உங்கள் கணவனுக்கு வந்துவிடக்கூடாது. உங்களிடமிருந்து உங்கள் மகனுக்கு வந்துவிடக்கூடாது. உங்களிடமிருந்து உங்கள் ஓட்டுநருக்கு வந்துவிடக்கூடாது. அதற்காகத்தான் வீட்டில் தனிமைப்படுத்தி இருங்கள் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. இப்பொழுது அரசின் உத்தரவுப்படி நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தே ஆகவேண்டும். காவல்துறை உங்களைக் கண்காணிக்கும். நீங்கள் வெளியில் வரக்கூடாது. வீட்டுத் தனிமையில் 14 நாட்கள் இருக்க வேண்டுமென்று உலக நலங்கு நிறுவனம் சொல்லியிருக்கிறது. கூடுதலாக 14 மேலும் 14 நாட்கள் வீட்டில் இருந்தே ஆக வேண்டும். அது கட்டாயம் என்பது அரசின் உத்தரவு. அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. காரணம் சமுகப் பரவல் வந்துவிடக்கூடாது என்பதுதான். அவரிடமிருந்து ஒருவருக்குக்கூட வந்துவிடக்கூடாது என்பதுதான். டெல்லியிலிருந்து வந்த ஒருவருக்கு அந்த நோய் தாக்கம் உறுதியானதை கண்டுபிடித்துவிட்டோம். இரவுபகல் போராடி- அவரோடு பேசியவர்கள், அவரோடு தொடர்வண்டியில் வந்தவர்கள், தேநீர் அருந்தியவர்கள்; முடிதிருத்தகத்தில் வேலை பார்த்தவர்கள், அவர் வீட்டில் இருந்தவர்கள், பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என எல்லோரையும் 193 பேரை தொடர்கிறோம். 193 பேரும் எனக்கு வந்துவிடுமோ, உனக்கு வந்துவிடுமோ என்ற பதட்டம், பயம், அச்சத்தில் இருக்கிறார்கள். மிகப்பெரிய அறைகூவலான முயற்சி. இந்த அறைகூவலை எதிர்கொள்வதற்காகத்தான் இவ்வளவு வேகமாக, இவ்வளவு துரிதமாக அடுத்தடுத்தகட்ட நடவடிக்கைகளை வேகமாக அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆகவே தயவு செய்து இந்தச் சூழ்நிலையில் அரசு பொதுமக்களைப் பார்த்துக்கொள்கிறது. முதல்வர் அனைத்துத் தேவையான எச்சரிக்கையுடன் இருங்கள், கவனமாக இருங்கள், மிகவும் சரியாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இன்னும் என்ன செய்யவேண்டுமென்று கேட்கிறார். மக்கள் செய்யவேண்டிய ஒரேயொரு பணி: ஒத்துழைப்பு. நான் வீட்டில் இருக்கின்றேன், நீங்களும் வீட்டில் இருங்கள். வீட்டிலேயே இருங்கள். விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள், வெளியில் போகாதீர்கள், பயணம் செய்யாதீர்கள். தயவுசெய்து எதிர்மறையான கருத்துகளுக்கோ, எதிர்மறையான பேச்சுகளுக்கோ, விவாதத்திற்கோ, இதை இப்படிச் செய்திருக்கலாமோ, இதை அப்படி செய்திருக்கலாமோ, இதை 2 நாட்களுக்கு முன்னாடி சொல்லியிருக்கலாமோ, 2 நாட்கள் தாமதமாக சொல்லியிருக்கலாமோ என்ற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. இன்றைக்கு ஒரு மிகப் பெரிய அச்சம். உலக வல்லரசு நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற ஒரு மிகப்பெரிய முயற்சிக்கு அரசு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது. அரசு இயங்குகிறது மக்களுக்காக! மக்கள் நீங்கள் இயங்க வேண்டாம், நீங்கள் வீட்டில் இருங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தலைமைச் செயலகத்திலிருந்து நான் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறேன். 60 கோடி ரூபாயோ, 500 கோடி ரூபாயோ, இன்னும் எத்தனை கோடி தேவையோ அதையனைத்தையும் செய்து கொடுப்பதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார். பொதுமக்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பை மட்டும்தானே கேட்கிறோம். ஒத்துழைப்புக் கொடுங்கள், வீட்டிலேயே இருங்கள், கவனமாக இருங்கள், வெளியே வராதீர்கள், ஒருவரிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளி இருங்கள், யாரிடமும் பேசாதீர்கள், விலகி நில்லுங்கள், விடுமுறை மனநிலைக்குப் போகாதீர்கள் என்றுதான் கேட்கிறோம். நீங்களாகவே முன் வந்து, மக்களாகவே முன்வந்து ஊரடங்குக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். தற்போது எல்லா அமைச்சர்களும், எங்களுடைய மாவட்டத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும், என்னுடைய தொகுதிக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற முயற்சிக்கு, முதல்வருடைய உத்தரவுக்கு தயவுசெய்து நாம் அத்தனை பேரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது கட்டாயம். நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், ஒத்துழைப்பை மற்றவர்கள் கொடுக்கச் செய்வதும் கட்டாயம். 100 ஆண்டுகளில் இதுபோன்ற நிலை தமிழகத்திற்கு, ஏன் உலகத்திற்கே வந்தது இல்லை. முதல்வரின் வழிகாட்டுதலோடு மக்கள் நல்வாழ்வுத் துறை, 24 மணிநேரமும் அணியமாக இருக்கிறது இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
சமூகத்தில் நோய்த் தொற்று மின்னல் வேகத்தில் பரவுகிறது. எல்லோரையும் பாதிக்கிறது. மிகப் பெரிய அச்சம். அகவை முதிந்தவர்களுக்கு ஏற்கெனவே நோயுற்றவர்களுக்கு இறப்பு நேரிடுகிறது. இந்த உலகத்திலுள்ள அத்தனை நாடுகளில் இருக்கக்கூடிய எல்லாவிதமான அச்சமாக பதட்டமாக எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தை தமிழக அரசு உணர்ந்த காரணத்தினால்தான் இந்த 144 போன்ற தடை உத்தரவுகள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



