Show all

அசத்தல்! 80 முறை துவைத்துப் பயன்படுத்தும் முழுஉடல் பாதுகாப்பு உடைகள்- உருவாக்கியுள்ளது கோவை நிறுவனம்

மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் முழுஉடல் பாதுகாப்பு உடைகளை கோவையைச் சேர்ந்த துகில் உற்பத்தி நிறுவனம் உருவாக்கி உள்ளது.

15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு உடைகள் பாதுகாப்பு கேடயமாக விளங்குகின்றன. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தவகை உடைகளின் தேவைகளும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் இந்தவகை கையுறைகள் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கான முகமூடிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தவகை பாதுகாப்பு உடைகளை ஒருமுறை கழற்றிவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. வேறு உடைதான் அணியவேண்டும். இதனால் இந்தவகை உடைகள் தொடர்ந்து தேவைப்படுவதற்கு முதன்மைக் காரணம் ஆகும்.

இந்தக் குறையைப் போக்கும் வகையில், மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் வகையிலான முழுஉடல் பாதுகாப்பு உடையை கோவையைச் சேர்ந்த துகில் உற்பத்தி தொழிற்சாலை உருவாக்கி உள்ளது. 80 முறை சலவை செய்து பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு.

இதுபற்றி தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 80 முறை துவைத்தாலும் துணியில் குளோரினேற்றம் செய்யும் திறனை இந்த முழுஉடல் பாதுகாப்பு உடை கொண்டுள்ளது. இது தென்னிந்திய துகில் ஆராய்ச்சி கழகத்தின் ஆன்டிமைக்ரோபியல் சான்றிதழை பெற்றுள்ளது. 

இந்த வகை உடை உருவாக்கத்திற்கு நாங்கள் பயன்படுத்தி உள்ள துணியில் குளோரின் நுண்நச்சுக் கொல்லி பண்புகள் உள்ளன. இந்த நுண்நச்சுக் கொல்லி தன்மையானது, துணியின் மேற்பரப்பில் இரண்டு கிழமைகள் வரை உயிர்ப்புடன் இருக்கும். துவைக்கும்போது, துணியின் மூலம் குளோரின் மீண்டும் உறிஞ்சப்படுகிறது. முதலில் துவைக்கும்போது கிடைக்கும் இந்த பலன், கிட்டத்தட்ட 80 முறை துவைத்தபிறகும் கிடைக்கிறது என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.