தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் அணியமாவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு பதிகை செய்துள்ளார். 10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு துயரநிகழ்வு தொடர்பாக விசாரணை ஆணையத்தில் அணியமாவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு பதிகை செய்துள்ளார். தூத்துகுடியில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் வந்தால், ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்றும் அதனால் சட்டம் ஒழுங்கு சிக்கல் வரலாம் என்பதால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என இரஜினிகாந்த் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 100 நாட்கள் நடந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளது 08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (22.05.2018) முன்னெடுக்கப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப்போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை அரசியல் கட்சியினர், சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். நடிகர் இரஜினிகாந்தும் தூத்துக்குடிக்குச் சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி- போராளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற அவரே- நேர் முரணாக போராட்டத்திற்கு எதிர் நிலைப்பாட்டில்- தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தால் எந்த முதலீடும் வராது. இப்படித்தான் தமிழகம் வறுமையில் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகிவிடும் என்றும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என்றும் கூறினார். ரஜினியின் இந்த எதிர் முரண் கருத்து பலத்த விமர்சனத்தைப் பெற்றது. இதனை அடுத்து, தூத்துக்குடி போராட்டத்தின்போது வெடித்த வன்முறை தொடர்பாகவும், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் ஓய்வுபெற்ற அறங்கூற்றுவர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக, இரஜினி குறிப்பிட்ட அந்த சமூக விரோதிகள் யார் என்பது குறித்து விளக்கம் தர நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பாணை அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க் கிழமையன்று அவர் ஆணையத்தில் அணியமாக வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. இந்நிலையில், நேரடியாக தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் முன் அணியமாவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்க, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளை எழுத்து வடிவில் சமர்பிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் அறங்கூற்று மன்றத்தில் இரஜினி மனு பதிகை செய்துள்ளார். இந்த மனுப்பதிகை இணையத்தில் கடுமையாக பகடியாடப்பட்டு வருகிறது. தெடை நடுங்கி இரஜினி என்ற முன்னெடுப்பு இந்திய அளவில் கீச்சுவில் தலைப்பாகியும் விட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



