12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரியின் உபரி நீர் வீணாக போய் கடலில் கலக்க போகிறது என்று பலரும் பேச தொடங்கியிருக்கிறார்கள். கடல்தான் மழைக்கான ஆதாரம். இப்போது தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால்தான், மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் இவ்வளவு தண்ணீர் செல்கிறது. கடலில் உபரி நீர் வீணாக கலப்பதாகச் சொல்வது கொடுமை. கடலுக்கு போகும் தண்ணீரை வீண் என்று சொல்லுவது பொருளாதார சொல்லாடல் என்று உழவர் அமைப்பு பொறுப்பாளர்கள் சிரிக்கிறார்கள். நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் பாதிப்பு உழவர் அமைப்பு கரூர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது என்று பேசும் நபர்கள் விபரம் தெரியாத, இயற்கையின் சுழற்சியை அறியாதவர்கள். ஆற்று நீர் கடலில் கலப்பது வீண் என அவர்கள் எந்த அடிப்படையில் பேசுகிறார்கள்? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ, திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வீண். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீர் காலம் காலமாகப் பயணித்து கடலில் கலந்ததைத் தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது எனச் சொல்ல தொடங்கியது நாம்தானே? அது கடலில் கலப்பது வீண் எனச் சொல்வது அறியாமைதான். அது அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் நச்சு விதையாக மாறிபோகும். காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் கட்டப்பட்டவை. ஆனால், காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டு அகவை உடையது. குடகு மலையில் பிறந்து, இன்றைக்கு கர்நாடகமாக ஆகிவிட்ட மேட்டுநிலப்பகுதியைத் தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து, வண்டல் மண் கழிமுகத்தில் ஓடி, பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்து வந்தது. ஒவ்வொரு கடலிலும் சில தனித்துவமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. 'நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்' என்பார் திருவள்ளுவர். கடல் நீர் உப்பின் அடர்த்தியைச் சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆறுகளின் நீர்தான். அதைவிட முதன்மையாக கடற்கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும். இதற்கு எடுத்துக்காட்டு சீனா. சீனா நாட்டில் உள்ள மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணை. அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சளற்று கழிமுகப் பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன கொடும் நிகழ்வு நடந்திருக்கிறது. நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதைச் சரிசெய்ய சீனா தற்போது கடுமையாகப் போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியைக் கடலுக்கே விட்டுவிடுகிறது என்றார். தற்சார்பு உழவர்கள் அமைப்புச் செயலாளர் கி.வே.பொன்னையன், காவிரி நீர் என்பது கர்நாடக, தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்கும் சொந்தமானது. நாமும் இயற்கையின் ஓர் அங்கம். நாம் மட்டுமே அதைச் சொந்தமாக்கிக் கொள்ளும்போது இயற்கையின் தொடர்ச் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கைச் சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை. காவிரி தீர்ப்பில்கூட, 10டி.எம்.சி தண்ணீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வெறுமனே ஆற்றில் போக வேண்டும் என்ற உத்தரவு சொல்லப்பட்டிருக்கிறது. அதில், அதிகமாகத் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது என்பது நமக்கு நாமே வெட்டிக் கொள்கிற சவக்குழி. அப்படி தடுப்பணைகள் கட்டி அவ்வளவு நீரை நாம் என்ன செய்ய முடியும்? கீழப்பவானி வாய்க்காலில்கூட 2300 கன அடி தண்ணீரைத்தான் கொண்டு போக முடியுது. எல்லா காவிரி கிளை வாய்க்கால்களிலும் அதிகபட்சம் இருபதாயிரம் கன அடி நீரைத் கொண்டு போக முடியும். 50 ஆயிரம் கன அடி நீரை, எங்கு நாம் தேக்குவது? கடலுக்குச் செல்லும் தண்ணீரை வீண் என்பது நுகர்வு கண்ணோட்டம். கர்நாடகாவில் ஒரு அணை மேட்டூரில் அணைதான் ஆய்வு அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது. கர்நாடாகவில் இந்திய விடுதலைக்குப் பின் கட்டப் பட்ட அணைகள் தமிழகத்திற்கு மட்டுமல்ல இயற்கைக்கே எதிரான அடாவடி அத்து மீறல்கள்தாம். நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறது என்று வருந்துவது தவறு. முதலில் ஒரு அணையைக் கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும். அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளைக் கட்டமுடியாது. ஏரி, குளங்களைத்தான் அமைக்க முடியும். அதனால்தான் ,நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களைக் காவிரி கழிமுகப் பகுதியில் வெட்டினார்கள். ஆனால், காவிரி கழிமுகத்தில் கல்லணை கட்டப்படவில்லையா? எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்க மாட்டார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரைத் தடுத்து உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என நான்காகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை. அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் ஆறு வெள்ள நீர் எவ்வளவு திறக்கப்பட்டாலும் தாங்கும். அந்த வெள்ளநீரைப் பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி. அதனால், நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளைப் பாதுகாப்பது மட்டும்தான். இங்கிருக்கும் ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர். ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர். அதனால், கடலில் வீணாகக் காவிரி நீர் கலக்கிறது என்று சொல்லும் தண்ணீரை வியாபாரமாக்கும் பன்னாட்டுக் நிறுவனங்களின் உளறலை நாமும் செய்யக்கூடாது என்று முடித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



