10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சீர்திருத்த சட்டமுன்வரைவு சட்டப்பேரவையில் இன்;று பதிகை செய்யப்பட்டுள்ளது. 03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று கூடும் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் இடையே, தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் சீர்திருத்த சட்டமுன்வரைவு பதிகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இதனை சட்டப்பேரவையில் பதிகை செய்தார். முன்னதாக தமிழ்வழியில் பட்டப்படிப்பு படித்திருந்தால் தமிழக அரசுப்பணிகளில் 20விழுக்காடு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. இன்று பதிகை செய்யப்பட்டுள்ள சட்டமுன்வரைவின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும். அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும். அதேபோன்று 10 ஆம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும் என்று சட்டமுன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வரைவு ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டவடிவம் பெறும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



