05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன. இதற்கு, பொதுமக்களும், உழவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தநிலையில், இந்தத் திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, தர்மபுரி மாவட்ட வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த உழவர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரை தொடர்ந்து, இந்தத் திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட மேலும் சிலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் அறங்கூற்றுவர்கள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று தடை விதித்து அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு அறங்கூற்றுவர்கள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அட்டவணை நடுவண் அரசின் சார்பில் பதிகை செய்யப்பட்டது. அதை படித்துப் பார்த்த அறங்கூற்றுவர்கள் 8வழிச் சாலை திட்டத்திற்கான சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் அனுமதியை பெறுவதற்கு முன்பே நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டு விட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது, மறுபுறம் நிலங்களை உட்பிரிவு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நடுவண் அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், 8வழிச் சாலை திட்டத்துக்கான தொடக்கக் கட்ட பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. விதிகளின்படி, இதுபோன்ற நிலம் கையகப்படுத்தும் தொடக்கக் கட்ட பணிகளை மேற்கொள்ளலாம். அதே விதிகளின்படி, நடுவண் சுற்றுச் சூழல் அமைச்சகம், இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், இந்த 8 வழிச்சாலை திட்டத்தை மேற்கொண்டு மேற்கொள்ள முடியாது. அதனால், இந்த திட்டத்தை தொடர மாட்டோம் என்று கூறினார். அதாவது, திட்டம் ரத்து செய்யப்படும் என்பதை அவர் இவ்வாறு கூறினார். அப்போது மனுதாரர் சார்பில் அணியமான வழக்கறிஞர் சிவஞானசம்பந்தன் கூறுகையில், 8வழிச்சாலை திட்டத்தினால், பாதிக்கப்படும் நபர்களுக்கு எழுத்துப்பூர்வமான மனுக்களை எழுதி கொடுத்த 4 பேரை செய்யாறு காவல்துறையினர் கைது செய்து இருப்பதாக தெரிவித்தார். இதைக் கேட்ட அறங்கூற்றுவர்கள், காவல்துறையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: இந்தத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசும், அதிகாரிகளும் பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும், யாரையும் துன்புறுத்தவேண்டாம் என்றும் பலமுறை நாங்கள் கருத்து தெரிவித்து உள்ளோம். அதையும் மீறி 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். எனவே, இதுகுறித்து அரசு வழக்கறிஞர், காவல்துறையினரின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும். மேலும் இந்தத் திட்டம் தொடர்பான களப்பணியில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல் அதிகாரிகள் பிரச்சினையை பெரிதுப்படுத்தக்கூடாது. மக்களை துன்புறுத்தக்கூடாது. இந்தச் செயலை தொடர்ந்து செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறங்கூற்றுவர்கள் கூறினார்கள். பின்னர் அவர்கள் வழக்கு விசாரணையை வருகிற திங்கட் கிழமைக்கு ஒத்திவைத்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,917.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



