22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் அரசு பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர், சாலையில் அமர்ந்து கறுப்புக்கொடி பிடித்து போராட்டம் நடத்தினர். சாலை மறியலைத் தொடர்ந்து, தற்போது அண்ணா சமாதி நோக்கி பேரணியாகச் சென்று, உழைப்பாளர்கள் சிலைக்கு அருகே சாலையில் அமர்ந்து தொடர் முழக்கங்களை எழுப்பிவருகின்றனர். இந்தப் போராட்டத்தில், ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். எதிர்க் கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைமறியல், ஆர்ப்பாட்டம், தொடர்வண்டி மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன, சென்னையிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலினை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து, குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,748.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



