Show all

ஒத்துழையாமை இயக்கம்! காவிரி மோலாண்மை வாரியம் பெற்றிட, கமல் முன்வைக்கும் ஆகச்சிறந்த யோசனை

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது. ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என்று கேட்ட கமல், வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க மறுக்கும் என்றும் அவர் கூறினார். காவிரியில் நடுவண் அரசு செய்வது மிகப் பெருங்குற்றம் என்றும் அவர் எச்சரித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும் என்றும் காவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள், திசை திருப்பினால், திசை திரும்பமாட்டோம் என்றும் அவர் கூறினார். 

திருச்சி ஜி கார்னர் பகுதியில், மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் காவிரிப் பிரச்னை பூதாகரமாகியுள்ள  நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததற்கான கண்டனப் பொதுக்கூட்டம் என்று அந்தக் கூட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது.

நிர்வாகிகள் மற்றும் விருந்தினர்கள் சிலர் பேசிய பின்னர், சுமார் 8.30 மணிக்கு பேசத் தொடங்கிய கமல்ஹாசன், காவிரிப் பிரச்னையை மய்யம்கொள்ளும் இடமாக இந்த மேடை இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக குழப்பம் அதிகரித்துவருகிறது. நடுவில்; நடக்கும் அரசை நீங்கள் குற்றம் சாட்டவில்லையே எனக் கேள்வி எழுப்புகின்றனர். நடுவண் அரசு செய்வது குற்றம். இதுக்கு மேல் எப்படி அழுத்தமாகக் கூற முடியும்? நாசமாய்ப் போன அரசியல் மாண்பை மீட்டெடுப்பதே என் கனவு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை திசைதிருப்ப முயலாதீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். விடுதலைக்காக நாம் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தோம். அது உலகிற்கே முன்மாதிரியான இயக்கம். நடுவண் அரசுக்கு நாங்கள் சொல்லிக்கொள்வது இதுதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், அமைதியான முறையில் தமிழகம் உங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கும். ஜாக்கிரதை என்றெல்லாம் மிரட்ட மாட்டேன். வேண்டாம் எனக் கூறுகிறேன். கம்பெடுத்து வீடு கட்டி, தொடை தட்டுவதுதான் வீரம் என்றில்லை. வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை.

அரிசி தவிர வேறு தானியம் நாங்கள் உண்பதில்லை. நம்மைப் போலவே அவர்களும் முன்னோக்கிச் செல்பவர்கள்தான். எல்லாரும் பிரச்னை பற்றிப் பேசுகிறார்கள். இதெல்லாம் நியாயமான விவாதங்கள்தான். மக்கள் நீதி மய்யம் நிறைய அறிஞர்களிடம் பேசி, தீர்வை நோக்கிச் செல்கிறது. அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அந்தத் தீர்வை நோக்கிச் செல்ல, தமிழக அரசு நகர மறுக்கிறது. காவிரி நீருக்காகக் கெஞ்சும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். நடுவண் அரசின் முதுகில் ஒளிந்துகொள்கிறது தமிழக அரசு. நீங்கள் செய்யுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள். செய்வதற்கு எங்களிடம் ஆட்கள் இருக்கிறார்கள். மய்யம்னா என்ன? நடுவில் நிற்பதா? நல்லவர்களிடம் நிச்சயம் சேருவோம். நிச்சயம் நல்லவர்கள் பக்கமே சாய வேண்டும் என்பது எங்களின் திண்ணமான முடிவு என்று பேசினார். 

இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அறிஞர்கள் சிலரிடம் கமல்ஹாசன் கருத்துக் கேட்பது போன்ற காணொளிக் காட்சிகள் திரையிட்டுக் காட்டப்பட்டன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,748. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.