Show all

60 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்திட ஆதரவு!

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை

20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகிறார். 

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், பள்ளிகள் சார்பில் இணையதளம் வாயிலாக கருத்துகள் கேட்கப்பட்டன. இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடந்த ஆலோசனையின் போது பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை கருத்துக்கள் கேட்கப்பட்டன. 

இதில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை 60 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என கூறி உள்ளனர். 

இது குறித்து சில ஆசிரியர்கள் கருத்து கூறுகையில், பனிரெண்டாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி. ஆனால் மதிப்பெண் அதிகம் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வை எழுதலாம் என்கிற ஒரு முடிவை அரசு எடுத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறி உள்ளனர்.

ஒன்றிய அரசு, ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒன்றிய இடைநிலைக் கல்விக்கான சான்றிதழ் (ஐசிஎஸ்இ) தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்ததே தவிர நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை.

மாநிலப் பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்த மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு மருத்துவப் படிப்புக்கு இடமளிக்க வேண்டும், ஒட்டு மொத்த தமிழகத்தின் கோரிக்கையான, நீட் உள்ளிட்ட தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியிறுத்தி வருகிறது. இந்த சூழலில் மாநிலப் பாடத்திட்ட தேர்வுகளை ரத்து செய்தால் கட்டாயம் நீட் எழுத வேண்டிய நிலையை உருவாக்குவதாகிவிடும் என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, வைகோ உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். ஒன்றிய அரசின் சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப்பாட்டில், தமிழக மாணவர்களில் உரிமை காக்கும் வகைக்கு பாதுகாப்பாக 12 வகுப்புக்கான பொதுத்தேர்வை நடத்தப் போகிறதா தமிழக அரசு? அல்லது முந்தைய அதிமுக அரசு போலவே பாஜகவின் வஞ்சக வலையில் தமிழக கல்வி உரிமையைக் காவு கொடுக்கப் போகிறதா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.