Show all

எழுவர் விடுதலை! ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார் அற்புதம்மாள்

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு முடிவு எடுக்கலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தீர்மானமும் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. 

ஆனால் அந்தப் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த வித முடிவையும் எடுக்கவில்லை, அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் எழுவர் விடுதலை தாமதமாகி கொண்டே வருகிறது. இந்த தாமதம் வேண்டாம் என்றும் விரைந்து ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். அப்போது எழுவரையுமம் விடுவிக்க தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையில் கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு ஒன்றையும் அளித்தார். 

ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் பேசினார். 

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்தேன். அந்த மனுவில அறங்கூற்றுவர் கே.டி. தாமஸின் தீர்ப்பு விவரத்தையும் இணைத்திருக்கிறேன். தமது மகன் தரப்பு நியாயத்தை மனுவில் எழுதியிருப்பது குறித்தும் விளக்கினேன். நம்பிக்கை உள்ளது அதனை ஆளுநர் கனிவுடன் கேட்டார். மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். எனவே அமைச்சரவை பரிந்துரையை உடனடியாக பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. இவ்வாறு அற்புதம்மாள் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,921.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.