Show all

சாத்தான்குளம் பெண் தலைமைக்காவலர் ரேவதி வீட்டுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு

சாத்தான்குளத்தில் வணிகர்களான- தந்தை, மகன் காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தது தொடர்பாக துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் தலைமைக்காவலர் வீட்டுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தச் நிகழ்வு தொடர்பாக மதுரை உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் கோவில்பட்டி குற்றவியல் அறங்கூற்றுத்துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், அங்கு பெண் தலைமைக்காவலராக பணியாற்றிய ரேவதி அறங்கூற்றுத்துறை நடுவர் பாரதிதாசனிடம் துணிச்சலாக சாட்சியம் அளித்தார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் இரவு முழுவதும் கொடூரமாக தாக்கியதாகவும், அதில் காவலர்களின் லத்திக்கள் மற்றும் மேசையில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

குற்றப்பிரிவு குற்ற விசாரணைத்துறை காவலர்கள் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சில காவலர்களை கைது செய்திருப்பதற்கு ரேவதியின் சாட்சியமும் முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது.

காவல்துறையினருக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் தனக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என ரேவதி வேண்டுகோள் விடுத்தார். 

இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும், அவருக்கு காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அறங்கூற்றுவர்கள் புகழேந்தி, பிரகாஷ் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும், அறங்கூற்றுவர்கள் ரேவதியை செல்பேசியில் அழைத்துப் பாராட்டியதுடன், தைரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உயர் அறங்கூற்றுமன்ற உத்தரவை தொடர்ந்து சாத்தான்குளம் அருகேயுள்ள அறிவான்மொழி கிராமத்தில் உள்ள ரேவதியின் வீட்டுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 பெண் காவலர்கள் அவரது வீட்டுக்கு வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவரது கணவர் சந்தோஷ் கூறும்போது, எங்களது வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளமைக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் எனது மனைவிக்கு மேலதிகாரிகளால் எந்தவித தொந்தரவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.