நிலைப்பேழைகளில் வைக்காமல், பித்தளைப் பாத்திரத்துக்குள் தங்க நகைகளை வைத்திருந்தால் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியிருக்கிறது 31பவுன் தங்க நகைகள். 25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் வீட்டைப் பூட்டிவிட்டு சொந்த ஊருக்குச் சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் உள்ளே நுழைந்திருக்கின்றனர். நிலைப்பேழைகளில் தங்க நகைகளை வைக்காமல் பித்தளைப் பாத்திரத்துக்குள் நகைகளை வைத்திருந்தால் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியிருக்கிறது. தேவராசன், மனைவணிகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரின் மனைவி சங்கீதா. இந்த இணையருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். கடந்த மாதம், சங்கீதாவின் சொந்த ஊரான ஓசூருக்கு குடும்பத்தினரை தேவராசன் அழைத்துச் சென்றார். இந்தநிலையில் முந்தாநாள் தேவராசனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டினர் அவருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த தேவராசன் குடும்பத்தினரோடு சென்னை திரும்பினார். அதற்குள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். வீட்டிலிருந்த நிலைப்பேழைகள் உடைக்கப்பட்டு பொருள்கள் அனைத்தும் வீடு முழுவதும் சிதறிக்கிடந்தன. தகவல் கிடைத்ததும் ஒசூரிலிருந்து சென்னை வந்த தேவராசன் நிலைப்பேழையில் வைக்கப்பட்டிருந்த 31 புவுன் தங்க நகைகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். அது குறித்து கணவரை கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் தெரிவித்ததோடு, சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பாத்திரங்களிலிருந்து தங்க நகைகளை எடுத்து தேவராசனிடம் சங்கீதா கொடுத்தார். அதைப் பார்த்த தேவராசன், மகிழ்ச்சி அடைந்து மனைவியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பாராட்டி மகிழ்ந்தார். இதையடுத்து ஆவடி காவல் நிலையத்தில் தேவராசன் புகாரளித்தார். இந்தத் திருட்டு நிகழ்வில் எந்தப் பொருள்களும் கொள்ளை போகவில்லையென்றாலும், கொள்ளையடிக்க முயன்றவர்கள் யாரென்று அந்தப் பகுதிகளில் அமைந்திருக்கும் கண்காணிப்பு படக்கருவிகயை ஆய்வு செய்து வருகின்றனர் காவல்துறையினர். தேவராசனின் மனைவி சங்கீதாவின் முன்னெச்சரிக்கையான இந்தச் செயலால் 31 பவுன் தங்க நகைகள் கொள்ளைபோகாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் சங்கீதாவுக்கு காவல்துறையினரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இது குறித்து சங்கீதா கூறுகையில், எங்கள் வீட்டில் நான்கு நிலைப்பேழைகள் இருக்கின்றன. அவற்றில் தங்க நகைகளை வைத்தால் கொள்ளைபோய்விடும் எனக் கருதித்தான் சமையலறையில் பித்தளை பாத்திரங்களில் தங்க நகைகளை வைத்திருப்பேன். இது, என்னைத் தவிர வீட்டில் யாருக்கும் தெரியாது. அண்மையில் என் தந்தை இறந்துவிட்டார். அதனால் அவர் பார்த்துவந்த தொழிலை கவனிக்கத்தான் நானும், என் கணவரும், குழந்தைகளும் ஓசூருக்குச் சென்றோம். வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லும்போது வழக்கம்போல கொள்ளையர்களுக்கு பயந்து 31 பவுன் தங்க நகைகளைப் பித்தளைப் பாத்திரத்தில் வைத்துவிட்டுச் சென்றேன். வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், நான்கு நிலைப்பேழைகளையும் உடைத்து அதில் தங்க நகைகளைத் தேடியிருக்கின்றனர். நல்லவேளையாக பித்தளைப் பாத்திரத்தில் வைத்திருந்த தங்க நகைகள் கொள்ளையர்களின் கண்களில் சிக்கவில்லை என்றார். நாமும் ஊருக்குச் செல்லும் போது, பாதுகாப்பாக நமது நகைகளை வைத்துவிட்டுச் செல்ல, இந்த தகவல் நமக்கு உதவக்கூடியதுதான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.