Show all

ஒன்றிய பாஜக அரசை இயக்கும் இரண்டு சக்திகள்! முதலாவது ஹிந்துத்துவவாதிகள் இரண்டாவது கார்ப்பரேட்டுகள்- கொதித்த திருமாவளவன்

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துவரும் ஆளுநர் கிரண் பேடியைத் திருப்பி அழைத்துக் கொள்ளக் கோரும் போராட்டத்தில், கார்ப்பரேட்டுகள், ஹிந்துத்துவவாதிகள் என்ற இரண்டு சக்திகள்தான் ஒன்றிய பாஜக அரசை இயக்குகின்றன என்று விளக்கிப் பேசினார் திருமாவளவன்.

25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துவரும் ஆளுநர் கிரண் பேடியைத் திருப்பி அழைத்துக் கொள்ளக் கோரும் போராட்டத்தைக் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், நேற்று முதல் தொடங்கியிருக்கின்றன. 

மறைமலை அடிகள் சாலை, அண்ணா சிலை அருகில் நேற்று காலை தொடங்கிய போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அங்கேயே இரவு உணவை முடித்துவிட்டு தரையில் படுக்கைகளை விரித்துப் படுத்தனர்.

நேற்று இரவு சாரல் மழை பெய்த நிலையிலும் குளிரைப் பொருட்படுத்தாமல் அனைவரும் அங்கேயே உறங்கினர். இன்று காலையிலும் தொடர்ந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர், ரவிக்குமார் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய திருமாவளவன் மக்கள்நலனுக்கு எதிராகச் செயல்படும் கிரண் பேடியை உடனே திரும்பப்பெற வேண்டும் என மோடி அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

தமிழகத்துக்கு ஆளுநர் பதவியும், புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர் பதவியும் தேவையே இல்லை. நாடு முழுவதும் ஆளுநர் பதவிகளே தேவையில்லை என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும்போது, நடுவில் இந்த ஆளுநர் பதவி தேவையா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியவர்களுக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தப் பதவிகள். மோடிக்கு தேவையானவர்களுக்குப் பதவி கொடுக்க வேண்டுமென்றால், அவர்கள் வீட்டில்வைத்துப் பதவியை கொடுத்துக்கொள்ளுங்கள்.

கிரண் பேடி, ஊழலை ஒழிக்கப்போகிறேன் என அன்னா ஹசாரேவுடன் கைகோத்தார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்துக்கு மறைமுகமாகச் செயலாற்றியவர் இவர். தொடர்ந்து பாஜகவில் இணைந்து செயல்படத் தொடங்கியவுடன் அவரும் ஒரு சங்கி என்பது தெரியவந்தது.

பெரியார் சொல்வதைப்போல பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. சங்கி என்றால் சங் பரிவார் அமைப்புகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்தப் போராட்டத்தால் மோடி, கிரண் பேடியைத் திரும்பப் பெற்றுவிடுவாரா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், மோடியும் ஒரு சங்கிதான்.

ஹிந்துக்களுக்காகப் போராடுகிறோம் என்று கூறி மதத்தைவைத்து அரசியல் செய்கிற இவர்கள்-  நீட், சரக்குசேவை வரி, பண மதிப்பிழப்பு போன்றவற்றில் அதே மக்களைத்தான் பாதிக்க வைக்கிறார்கள். இப்படி சொந்த மக்களையே பாதிக்கும் தலைப்புக்கானவர்களான ஹிந்துத்துவாவாதிகளும் குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்காக மட்டுமே இவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள் என்று பேசினார் திருமாவளவன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.