கடும் கட்டுப்பாடுகளுடன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. 25,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக திரைப்படப் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு “பொன்னியன் செல்வன்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஐதராபாத்தின் ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்ட அரங்கில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிசா உள்பட படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத் விரைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவக அறையிலிருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்தவுடன் உணவக அறைக்குச் செல்ல வேண்டும் எனவும் இதற்கிடையில் வேறு எங்கும் பயணிக்கக் கூடாது என்று படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டால் பணிகள் அனைத்துமே முடித்துவிட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.