Show all

எதார்த்தமாக கேள்வி கேட்டு விட்டு, பாதிக்குமோ என்ற அச்சத்தில்! ரஜினிகாந்த்தை யார் நீங்க என்று கேட்ட வாலிபர்

19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ரஜினிகாந்த் சென்றிருந்தார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒவ்வொருவரிடமாக நலம் விசாரித்து வந்த ரஜினியிடம், தலையில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வந்த 22 அகவை சந்தோஷ் ராஜ் என்ற கல்லூரி மாணவர், ரஜினிகாந்த்தை பார்த்து, யார் நீங்க என கேட்க அதற்கு நான்தான்பா ரஜினிகாந்த் என அவர் பதிலளித்தார். 
100 நாட்கள் போராட்டம் நடைபெற்றபோது, சென்னை ரொம்ப தூரத்தில் இருந்திச்சோ, அப்போல்லாம் எங்களை பார்க்க வரவில்லை, இப்போது வந்துள்ளீர்கள். மற்றபடி நீங்கள்தான் ரஜினிகாந்த் என்பது எங்களுக்கு தெரியும் என்றார் அவர். 
அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், சமூக விரோதிகள் புகுந்து தூத்துக்குடி போராட்டத்தை கெடுத்ததாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், சந்தோஷ்ராஜ் கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் ரஜினிகாந்த் ஆதரவாளர்களும், அவரின் அரசியல் நாயகர்களும் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்த நிலையில், எதிர்த்து கேள்வி கேட்ட சந்தோஷ் ராஜ் மீது தேச துரோகி குற்றச்சாட்டு சுமத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அதன் பொருட்டு தேசியக் கொடியை எரித்த திலீபனுக்கும் சந்தோஷ் ராஜுக்கும் தொடர்பு உள்ளதாகவும், பரப்பப் பட்டு வருகிறது. 
ரஜினிகாந்த் வந்து சென்ற பிறகு திலீபன் மருத்துவமனைக்கு வந்து சென்றதுதான் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு. 
அப்படி நடந்தால் என்னுடைய எதிர்காலம் பாதிக்கும். நாங்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களிடம் மட்டுமே நான் கேள்விகளை கேட்டேன். ஆதரவு தெரிவித்தவர்களிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வந்தார். அவர் எங்களிடம் நலம் விசாரித்தார். அவரிடம் நான் உள்பட யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லையே. நாங்கள் போராட்டம் நடத்தியபோது சரத்குமார் எங்கள் பகுதிக்கு வந்தார். அதுமட்டும் இல்லாமல் மக்கள் முன்னிலையிலேயே அங்குள்ள தண்ணீரைப் பிடித்து குடித்தார். அந்த அளவுக்கு எங்களது போராட்டத்தில் அவர் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார். 
நான் ரஜினிகாந்த் ரசிகர் என்ற முறையில் உரிமையில்தான் அந்த கேள்வியைக் கேட்டேன். அவர் இத்தனை நாட்களாக எங்கு இருந்தார்? இப்போது மட்டும் அவர் வர என்ன காரணம்? அவர் எங்களை சமூக விரோதிகள் என கூறுகிறார். நாங்கள் சமூக விரோதிகள் என்றால் எங்களுக்கு ஏன் பணம் தர வேண்டும்? பணம் கொடுத்து அவர் சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறாரா? ரசிகர் என்ற முறையில் ரஜினி கருத்து எனக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு சந்தோஷ்ராஜ் கூறினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,806.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.