09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த்தை அதிமுகவில் இணைத்து அதன் மூலம், பாஜக ஆதாயம் அடையலாம் என சில தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள போதிலும், மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் பணிகளில்தான் தீவிரமாக உள்ளாரே தவிர கட்சி தொடங்கவில்லை. அதே நேரம் சக நடிகர் கமல்ஹாசன், மக்கள்நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி முழு நேர அரசியல்வாதியாக வலம் வந்தபடி உள்ளார். ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்காததன் பின்னணியில், பாஜக தலைவர்கள் சிலரின் ஆலோசனை இருப்பதாக ஒரு தகவல் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. புதிதாக கட்சி தொடங்கி வாக்கு வங்கியை உருவாக்குவது, கட்டமைப்பை ஏற்படுத்துவது, இருக்கும் கட்சிகளின் நிர்வாகிகளை எதிர்த்து வேலை செய்வதெல்லாம் மிகப்பெரிய வேலை. பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து தமிழகம் சந்திக்க உள்ள நிலையில், படங்களில் நடித்தபடியே கட்சியை தொடங்கி இதையெல்லாம் செய்வது நடைமுறைக்கு ஆகாது என்று பாஜக தலைவர்கள் சிலர் ரஜினிகாந்த்துக்கு ஆலோசனை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக அதிமுகவில் ரஜினிகாந்த்தை சேர்த்து முன்னிலைப்படுத்தலாம் என்பது அவர்கள் திட்டமாக உள்ளதாம். எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் ஆகியோரைவிட ரஜினிகாந்த்துக்கு அதிக முதன்மைத்துவத்தை அதிமுகவில் பெற்றுத்தர வேண்டும் என்பது பாஜக திட்டமாக உள்ளதாம். இதனால்தான் அண்மையில் அதிமுக தலைமைக்கு நெருக்கடி தரும்விதமாக குறி வைத்து வருமான வரித்துறை சோதனைகளை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதுபற்றி கூறும்போது, ரஜினிகாந்த்தை அதிமுகவிற்குள் சேர்த்துவிட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. ஆனால் இப்போதுள்ள அதிமுக தலைவர்கள், அமைப்பு பற்றி ரஜினிக்கு அதிருப்தி உள்ளது. எனவே அதிமுகவை ரஜினிக்கு ஏற்ப மாற்றுவதற்காகத்தான் வருவான வரித்துறை சோதனைகள் நடத்தப் பட்டன என்று ஆணித்தரமாக தெரிவித்தார். இந்த நிலையில்தான், தமிழகத்தை ஊழல் மிகுந்த மாநிலம் என பாஜக தலைவர் அமித்ஷா விமர்சனம் செய்தது, பன்னீர்செல்வம் புறக்கணிப்புக்கு உள்ளானது போன்றவற்றையும் பொருத்தி பார்க்க வேண்டியுள்ளது. ரஜினிகாந்த்தும் கூட அண்மையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சேலம்-சென்னை 8 வழிச்சாலை விசயங்களில் அதிமுக தலைவர் போன்ற கருத்தைத்தான் வெளிப்படுத்தியிருந்தார். ரஜினிகாந்த், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக கூறியிருந்தார். பாஜக எப்போதுமே தனியாக வெற்றி பெற முடியாது என நினைக்கும் மாநிலங்களில் பிற கட்சி தோள்களில் பயணித்து தனது வெற்றிபோல அதை மாற்றிக்கொள்ளும் வியூகம் கொண்டது. வட கிழக்கு மாநிலங்களில் அப்படித்தான் நடந்தது. எனவே ரஜினிகாந்த்தை அதிமுகவில் உட்கார வைத்து, அதிமுகவோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கலாம். எம்ஜியார், ஜெயலலிதா என பழக்கப்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு ரஜினிகாந்த்தான் சரியான தலைவராக இருக்க முடியும். அப்போதுதான் அதிமுகவால் வெல்ல முடியும் என்று பாஜக தலைமை கருதுகிறது. எம்ஜிஆர் பற்றியும், ஜெயலலிதா பற்றியும் அண்மை காலமாக ரஜினிகாந்த் புகழ்ந்துரைத்து வருவது இதன் ஒரு பகுதிதான்,' என கூறுகிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,859.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



