Show all

ஞாயிறன்று சென்னை மெரினா கடற்கரையில் அறவழி போராட்டம்! வேல்முருகன் அறிவிப்பு

13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக வாழ்வுரிமை கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் நெய்வேலி நிலக்கரி நிறுவன வளைவு வாயில் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

1.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

2.தமிழக அரசு மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வை அனுமதிக்க கூடாது.

3.தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி நடந்து கொள்ளாமல், வரம்பு மீறி நடந்து கொள்ளுகிறார். இவ்வாறு வரம்பு மீறி நடந்து பாலியல் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகி இருக்கிறார். ஆளுநரை நடுவண் அரசு திரும்ப பெற வேண்டும், இல்லையெனில் பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

4.சுற்றுச்சூழலை கெடுக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க போராடியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அவர்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆளும் பாரதீய ஜனதா அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் உணர்வுகளை புறக்கணித்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட கழிமுக மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் வருகிற ஞாயிறன்று சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே அறவழிப் போராட்டம் நடத்தப்படும். இதில் தமிழக மக்கள், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,769.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.