Show all

தமிழர் தொன்மை நிறுவலுக்கான மேலுமொரு ஆதாரம்! கீழடியில் கிடைத்தது போன்று விழுப்புரத்தில் பெரிய செங்கற்கள்

இப்படி நிறைய ஆதாரங்கள்- நிறைய ஆய்வுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக பாகிஸ்தானிலிருந்து குமரிக் கண்டம் வரை நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் அத்தனையும் கிடப்பில். 

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்த சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைத்துள்ளது கொடுக்கூர் கிராமம். இங்கே தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செங்கல் சூளை கற்களுக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பூமிக்கடியில் பழமையான முதுமக்கள் தாழி, சேமக்குடுவை, எலும்புகள், பானை ஓடுகள், கீழடியில் கிடைக்கப்பெற்றது போன்று பெரிய செங்கற்கள் கிடைத்துள்ளன.

பழங்கால பொருட்கள் கிடைத்ததையடுத்து இப்பகுதி மக்கள் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியரும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளருமான ரமேஷ் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் கைப்பற்றி, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் குறித்து விளக்கமளித்த விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியரும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளருமான ரமேஷ், பழமைவாய்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ள மண் பானைகள், தாழிகள், எலும்புகள், சேமக் குடுவைகள் கிடைத்துள்ளன. இங்கே கிடைக்கப்பெற்ற சேமக்குடுவையைப் போன்று ஆதிச்சநல்லூரிலும் கிடைத்திருக்கிறது. ஆனால் இங்கே முழுமையாக கிடைக்கவில்லை, பாதி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் பழங்கால கட்டடங்கள் இருந்ததற்கு அடையாளமாக பெரிய செங்கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, கருப்பு மற்றும் சிவப்பு வடிவிலான பானைகள் கிடைத்திருப்பதன் மூலம் இவைகள் 2000 ஆண்டுகள் முற்பட்ட சங்ககாலத்தை சார்ந்தது என்பது தெரிகிறது. இதில் மேற்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால் எழுத்து பொறிக்கப்பட்ட அல்லது குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது, என்றார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், ‘இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களை அங்கேயே பாதுக்காக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார் ரமேஷ்.

கிடைக்கப்பெற்ற தொல்லியல் பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கப் பெற்ற மண் குடுவைகள் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். கீழடியில் கிடைக்கப்பெற்றதை போல் பெரிய செங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இங்கே அகழாய்வு நடத்த வேண்டும். மேலும், கிடைத்த தொல்லியல் பொருட்கள் தொடர்பாக தமிழக தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் ஒரு கிழமை காலத்தில் தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் என தெரிவித்துள்ளார் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

இப்படி நிறைய ஆய்வுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக பாகிஸ்தானிலிருந்து குமரிக் கண்டம் வரை நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் அத்தனையும் கிடப்பில். 

அரப்பா என்பது இந்தியத் துணை கண்டத்தின் மிகப்பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் ஒன்று ஆகும். இத்தொல்லியல் தளம் இன்றைய பாக்கித்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தின் சகிவால் நகரத்திற்கு மேற்கில் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது

மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் அது தமிழர் நாகரிகம் என்று சொல்லுவதற்கு மனம் இல்லாத காரணத்தால், ஆரியருக்கு முந்தைய தொன்மை நாகரிகம் என்று மட்டும் பேசப்படுகிறது. 

சர் ஜான் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள பொருட்கள் கி.மு.900 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று நடுவண் அரசு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. ஆனால் ஆதிச்சநல்லூர் தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் எனதொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் வேண்டுகோள் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிக் கொண்டிருக்கிறது.

1904ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தான் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் அகழ்வாய்வு ஆகும். அதன்பின்பே 1924ஆம் ஆண்டு சிந்துசமவெளி மற்றும் அரிக்க மேடு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நடுவண் தொல்லியல் துறையின் அனுமதியோடு 2004ஆம்ஆண்டு முதல் ஆதிச்சநல்லூரில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டன. நான்கு தொகுதிகளாக இந்த ஆய்வறிக்கை தொகுக்கப்பட்ட நிலையிலும் அதை வெளியிடாமல் திட்டமிட்டு முடக்கினர். 

இந்தநிலையில் தான் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள் கி.மு.900 ஆண்டுக்கு முந்தியவை என்று நடுவண் அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கரிம முறைக் காலமறிதல்; பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான ஆய்வறிக்கையை தயாரிப்பதற்கு நடுவண் தொல்லியல் துறைக்கு இன்னும் காலம் கனிந்துவரவில்லை.

ஆதிச்சநல்லூரை அடுத்து தற்போது கீழடியும் தமிழர்களின் தொன்மைக்கு சான்று பகர வந்து விட்டது. இவற்றை இந்திய நாகரிகத்தின் முதன்மையான கண்டுபிடிப்பாக கருதி நடுவண் அரசு ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உலகிற்கு உண்மையை உணர்த்தியிருக்க வேண்டும். ஆதிச்சநல்லூரிலும், கீழடியிலும் தொய்வின்றி அகழ்வாராய்ச்சி நடைபெற வழி செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆய்வுகளை மண்மூடி புதைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நடுவண் பாஜக மோடி அரசு செய்தது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இந்தியாவின் தொன்மையான மொழியாக தமிழ்மொழியே இருந்திருக்க வேண்டும் என்று அறங்கூற்றுவர்கள் கூறியுள்ளனர். கீழடியும், ஆதிச்சநல்லூரும் கூறும் உண்மைகளை முழுமையாக கண்டறிந்தால்- இந்தியாவின் தொன்மை வரலாற்றை தமிழகத்திலிருந்துதாம் தொடங்க வேண்டும் என்று காலங்காலமாக என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வந்து கொண்டிருப்பதற்கு பொருள் இப்போது தெளிவாகியுள்ளது.

நடுவண் அரசில் உணர்ச்சியுள்ள தமிழர் அமைய வேண்டும். அல்லது நடுநிலையாளர் அமைய வேண்டும். அல்லது மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடுவண் அரசில் அமைய வேண்டும். 

ஆனால் இந்தியாவை ஆள்வது- பிரித்தானிய அட்சிக்கு முன்பும் பிரித்தானிய ஆட்சிக்குப் பின்பும் பார்ப்பனியர்களே. காங்கிரசாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரசை ஆதரிக்கிற திமுகவாக இருந்தாலும் சரி, பாஜகவை ஆதரிக்கிற அதிமுகவாக இருந்தாலும் சரி அங்;கே உள்ளீடாக பார்ப்பனிய அதிகாரம் நிற்கிறது.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.