ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே என்ற தமிழ்ச்சொலவடையை நினைவு கூர்வோம். அயல்சார்பைக் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழ்மரபை மறக்க வேண்டாம். பழந்தமிழ்க் கலைஞர்கள் தமிழ் மன்னர்கள் அவையில் நாடக அரங்கோற்றம் செய்யும் போது பரிசிலாக மனையும் விளைநிலமும் பெறுவது வழக்கம். ஆரியர்கள் தென்னகத்தில் நுழைய அவர்கள் கையிலெடுத்த கருவி தங்கள் இராமாயண, மகாபாரதத் தொல் கதைகளைப் பரப்புவதற்கான கூத்து. தமிழ் மன்னர்களை நாடி தங்கள் இராமாயண, மகாபாரத தொல் கதைகளை கூத்தாகப் பாடி ஆடிக் காட்டினர். அவர்கள் அந்நியர்கள் என்ற காரணத்தால் தமிழ் மன்னர்கள் அவர்களுக்குப் பொன்னையும் பொருளையும் பரிசிலாக வழங்கினர். தமிழ்க் கலைஞர்கள், தங்களால் தமிழ் நாடகமும் அரங்கேற்ற முடியும் ஆரியக் கூத்தும் ஆடிக் காட்ட முடியும் என்று ஆரியர் இராமாயண, மகாபாரத தொல் கதைகளை தமிழில் ஆடிக் காட்டினர். அப்படி தமிழ்க் கலைஞர்கள் ஆடிக்காட்டிய ஆரியக் கூத்திற்கு தமிழ் மன்னர்கள் வழக்கம் போல அந்நியர்களின் ஆரியக் கூத்திற்கு வழங்கும் பொன்னையும் பொருளையுமே பரிசிலாக வழங்கிய போது தமிழ்க் கலைஞர்கள் மனையும் விளைநிலமும் கேட்டுப் பெற்றதற்கு எழுந்தது தான் இந்தப் பழமொழி. ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே’ தமிழர்கள் அதே ஆர்வக் கோளாறில், ஆங்கிலப் புத்தாண்டை நம்முடைய விழா போல வஞ்சனையில்லாமல் கொண்டாடுகிறோம். அதை ஏன் நமது அடிப்படையில் கொண்டாடக் கூடாது? ஆரியர்களுக்கு நாள் தொடக்கம் பகல் 12மணி. ஆங்கிலேயருக்கு நாள் தொடக்கம் இரவு 12மணி. தமிழர்களுக்கு நாள் தொடக்கம் காலை 6மணி. தமிழர்களாகிய நாம் ஏன் ஆங்கிலப் புத்தாண்டை நமது அடிப்படையில் காலை 6மணிக்கு கொண்டாடக் கூடாது. நாம் ஏன் அவர்கள் அடிப்படையிலேயே நள்ளிரவில் கொண்டாடி விபத்துக்களுக்கும் அருவருப்புகளுக்கும் காரணமாக வேண்டும். ‘ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடினாலும் தாண்டவக் கோனே, நாளை காலை 6மணிக்கு தமிழ் அடிப்படையில் கொண்டாடலாமே தாண்டவக் கோனே’ இன்று பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 2021 வாழ்த்துக்கள். இன்றைய நாளிலும்- தங்கள் மீதான கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கு கட்டியம் கூறும் ஒன்றிய பாஜக அரசின் கருப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போரடி வருகின்றனர் வடஇந்திய வேளாண் பெருமக்கள். அவர்கள் விடிவுக்கும், ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஆடாவடிகளின் முடிவுக்கும் வாழ்த்துவோமாக.
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ‘ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே’
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.