இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த இல்லதரசிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, மதிப்பு மிக்கது என இல்லத்தரசி பணியை பாராட்டிச் சிறப்பித்துள்ளார். 20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சேலம் மாவட்டம், பெரியவீராணம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி அகவை 39.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரியவீராணம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அவர் மீது, தனியார் பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரால் நடக்க முடியவில்லை. இதையடுத்து அவர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சேலம் வாகன விபத்துக்களை விசாரிக்கும் தீர்ப்பாயம், இல்லத்தரசியான புவனேஸ்வரிக்கு மாதம் ரூ.4,500 வருமானம் பெறக்கூடிய தகுதியானவர் என்று நிர்ணயம் செய்து, அதனடிப்படையில் ரூ.8.46 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் புவனேஸ்வரி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரர் தனது குடும்பத்தைப் பாதுகாத்து வரும் இல்லத்தரசி ஆவார். அவருக்கு கணவரும் குழந்தைகளும் உள்ளனர். விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரால் மற்றவர் துணையில்லாமல் இனி தனது தேவைகளைகூட நிறைவு செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் இல்லத்தரசியின் பணி பெருமைக்குரியது. நேரம் காலம் இல்லாமல் எந்நேரமும் குடும்பத்திற்காக உழைக்க கூடியவர்கள். அதுமட்டுமல்ல, தேசத்தை கட்டிக் காக்கும் வாரிசுகளை உருவாக்கும் உன்னத பணியையும் செய்கின்றனர். இல்லத்தரசிகளுக்கு ஒப்பானவர்கள் ஒருவரும் இல்லை. வீட்டில் மிகவும் அடிப்படையாகக் கருதப்படும் இல்லத்தரசி மறைந்துவிட்டால் அந்த குடும்பம் திக்குத்தெரியாத நிலைக்கு சென்றுவிடும். குடும்பமே காணாமல் போய்விடும். அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வுடன் வாழ்ந்து குடும்பத்திற்காக கால நேரம் பார்க்காமல் உழைக்கும் இல்லத்தரசிகளின் பணியை சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் மேலோட்டமான உழைப்புடன் ஒப்பிட்டு விடமுடியாது. தனது நலத்தையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தினரை கவனிக்கும் இல்லத்தரசியின் பணியை எந்த தொழிலாளரின் பணியுடனும் ஒப்பிட முடியாது. இந்த உண்மையை தீர்ப்பாயம் கவனிக்க தவறியே ஒரு எளிய கணக்கீட்டு அணுகுமுறையில் இல்லத்தரசிக்கு மாத ஊதியத்தை நிர்ணயம் செய்துள்ளது. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு மாற்றம் செய்யப்படுகிறது. மனுதாரரின் மாத இழப்பீடாக ரூ.9 ஆயிரம் நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை ரூ.14 லட்சத்து 7 ஆயிரமாக உயர்த்துகிறேன். இந்தத் தொகையை பேருந்து காப்பீடு செய்துள்ள காப்பீட்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 விழுக்காட்டு வட்டியுடன் 12 கிழமைகளுக்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



