Show all

முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ட ம.நடராசன், முள்ளிவாய்க்கால் முற்றம் அருகேயே இனி துயிலுவார்

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் இனப்படுகொலையில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக தஞ்சையில் தனது நிலத்தை தானமாக வழங்கி அங்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தை  நடராசன்  அமைத்தார்.

தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் ம.நடராசன்  பிறந்தார். அவர் மாணவ பருவத்திலேயே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அதன்பின்னர் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்.

நடராசன்- சசிகலா திருமணத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார். நடராசன் , தமிழ்மொழி மீது அளவற்ற பற்றுக்கொண்டவராக இருந்தார். தமிழ், இலக்கியம் குறித்தும் அரசியல் பற்றியும் நடராசன், கருணாநிதியுடன் ஆலோசிப்பதுண்டு. மேலும் அனைத்து கட்சி தலைவர்களிடமும் நெருங்கி பழகியவர். கருணாநிதி, வீரமணி, வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களிடம் அன்பு பாராட்டி பழகியவர். புதிய பார்வை இதழை ஆசிரியராக இருந்து நடத்தி வந்தவர்.

ஆண்டுதோறும் தை மாதம் தஞ்சையில் பொங்கல் விழா நடத்தி தமிழ் அறிஞர்களை கவுரவப்படுத்தி பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வந்தார். 3 நாட்கள் தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இலங்கையில் இனப்படுகொலையில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக தஞ்சையில் தனது நிலத்தை தானமாக வழங்கி அங்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தை அமைத்தவர். இங்கு இலங்கையில் நடந்த போர் காட்சிகள் மற்றும் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து மரணம் அடைந்த முத்துக்குமரன் உள்ளிட்டோரின் நினைவு படங்கள் மற்றும் அங்குள்ள மணிமண்டபத்தில் தமிழுக்காக தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

நடராசன் தனது மாணவ பருவம் முதல் தனது கடைசிகாலம் வரை தமிழ் மொழிக்காகவும், தமிழ் அறிஞர்களை கவுரவப்படுத்தியும் வந்தார். 

நடராசன் உடலுக்கு அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் இன்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே அடக்கம் செய்யப்பட உள்ளது. சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த ம.நடராசன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.

நடராசன் உடல் பெசன்ட் நகர் பாரி தெருவில் உள்ள அவருடைய இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடராசன் உடலுக்கு வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். நடராசனின் சகோதரர்கள் சாமிநாதன், ராமச்சந்திரன், பழனிவேலு மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். செயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக், அவருடைய சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகீலா, தினகரன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சிவக்குமார் உள்பட அவருடைய குடும்பத்தினர் நடராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளாருக்கு இரவு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அருளானந்தம் நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடராசனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சிறைவிடுப்பில் நேற்று மதியம் தஞ்சைக்கு வந்தடைந்தார். 

இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு குடும்ப முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார். நடராசனுக்கு சொந்தமான நிலம் விளாரில் உள்ளது. அங்குள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராசன்  உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் திவாகரன் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,733.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.