23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில், கட்டண உயர்வை தமிழக அரசு கடந்த 07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல் (20.01.2018) அமல்படுத்தியது. ஒரே நாளில் ரூ.3,600 கோடி அளவுக்கு பேருந்துக் கட்டணங்களைத் தமிழக அரசு உயர்த்திவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை சிறிதளவு குறைத்து அரசு அறிவித்தது. ஆனால், முழுமையாக பேருந்துக் கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, தி.மு.க தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் விருப்பம்போல பயணிக்கும் ஒருநாள் பேருந்து பயணச்சீட்டுக் கட்டணம், ரூ.50-லிருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாகப் போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல, சென்னையில் மாதாந்திர பேருந்து பயணஅட்டைக்கான கட்டணம் ரூ.1,000-திலிருந்து, ரூ.1,300-ஆக உயர்த்தப்பட இருப்பதாகவும் தெரிகிறது. பயணிகள், மாதாந்திர பேருந்து பயணஅட்டைகளை வரும் 02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 முதல் (14.02.2018) பெற்றுக்கொள்ளலாம் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,689
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



