10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு கடந்த இரு நாட்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜியும், அறங்கூற்றுவர் சுந்தர் அடங்கிய அமர்வு வழங்கியது. அப்போது தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜி கூறுகையில், பேரவைத் தலைவர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் அறங்கூற்றுமன்றம் தலையிட முடியாது என்றார். அறங்கூற்றுவர் சுந்தர் கூறுகையில், பேரவைத்தலைவர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு அறங்கூற்றுவர்களும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் 3ஆவது அறங்கூற்றுவராக விமலாவை மூத்த அறங்கூற்றுவர் குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார். இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்றஉறுப்பினர்களில் தங்கத் தமிழ்ச்செல்வன் தவிர்த்து 17 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் புதிதாக ஒரு மனு பதிகை செய்யப்பட்டுள்ளது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச அறங்கூற்று மன்றத்திற்கு மாற்ற கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டால் உரிய நியாயம் கிடைக்காது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விடாக்கண்டனாக தினகரனும் - கொடாக் கண்டனாக பாஜக நடுவண் அரசும், சிறுபான்மை அதிமுக அரசை வீழ்த்துவதற்கும் - ஆயுள் நீட்டிப்பதற்குமாக போராடிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற எதிர்கட்சியான திமுக தனக்கிருக்கிற வலிமை கூட புரியாமல்: குப்பையை போட்டு, அள்ளிக் கொண்டு நடுவண் அரசின் தூய்மை இந்தியா கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற அப்பாவி ஆளுநருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. சிறுபான்மை அதிமுகவினரின் ஆட்சி ஊசி முனையில் நடந்து கொண்டிருக்கிறது. 13 பொது மக்களை பச்சை படுகொலை செய்த போதே கீழே சாய்ந்து விட்டது. ஆனாலும் எழுந்து தற்போது பசுமைச்சாலை கம்பின் மீது நின்று கழைக்கூத்தாடிக் கொண்டிருக்கிறது. இதனால் தான் திமுகவை கிள்ளுக் கீரையாக நினைத்து, அருவருப்பாய் பேசுவதையே பிழைப்பாக கொண்டிருக்கிற ராஜாவெல்லாம் ஸ்டாலின் குறித்து கேவலமாக கீச்சு போடும் அளவிற்கு திமுக தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது. தம்பி ஸ்டாலின்! அரசியல்தானே உங்கள் முழு நேரப்பணி? அப்புறம் தமிழக அரசியலை அடித்து நொறுக்குவதற்கு என்ன கிலி! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,828.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



