Show all

இட்லி அம்மாவின் கொடையுள்ளத்திற்கு சொந்த வீடு பரிசு! வழங்கி பெருமை கொள்ளும் மகிந்திரா நிறுவனம்

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி, ஏழைகளின் பசியைத் தீர்த்து வந்த ‘இட்லி அம்மா’ கமலாத்தாளுக்கு மகிந்திரா நிறுவனம் சொந்த வீடு வழங்க முன்வந்துள்ளது.

22,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா அவரது கீச்சுப் பக்கத்தில், ஏழை எளிய மக்களும் பசியாற வேண்டும் என்பதற்காக கோவையில் விறகு அடுப்பு மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்து வந்த கமலாத்தாள் குறித்து புகழ்ந்திருந்தார். 

இந்தப் பதிவு தீயானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தள ஆர்வலர்களிடையே ‘இட்லி அம்மா’ பரவலாக வரவேற்பைப் பெற்றார். அவரது கொடையுள்ளமும் பெரும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து கோவையில் இயங்கி வருகிற எரிவாயு நிறுவன முகாமையொன்று  உடனடியாக கமலாத்தாளுக்கு இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கியது. தற்போது, மகிந்திரா குழுமம் கமலாத்தாளுக்குச் சொந்தமாக நிலம் வாங்கி அவரது பெயரில் பதிவு செய்ய உதவியிருக்கிறது. அந்த நிலத்தில் கமலாத்தாளுக்கான வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தையும் அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.