Show all

காவிரிச்சிக்கலுக்கு முறையான தீர்வைக் கண்டுபிடிக்கவில்லை! நீட் தேர்வுக்கு வலுவான எதிர்ப்பைக் காட்டவில்லை

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரிச் சிக்கல் 900 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியிருந்தாலும், தொடர் தோல்வியைச் சந்திப்பது கடந்த 50 ஆண்டுகளாக மட்டுமேதான். 

900 ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக காவிரியைத் தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த, அணை என்று சிறு சிறு தடுப்புகளை ஏற்படுத்தி காவிரியின் திசையை மாற்ற முனைந்தது.

இரண்டாம் இராசராசசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளைத் தகர்தெறிந்து காவிரியில் தமிழர்களுக்கான உரிமையை மட்டும் மீட்டார். அவர் நினைத்திருந்தால் காவிரி தொடங்கும் இடத்தை கைப்பற்றியிருக்க முடியும். அப்படி செய்யாமல் விட்டதுதான் தமிழன் நியாயம். 

அதன் பிறகு 350 ஆண்டுகளுக்கு முன்னம் மைசூர் அரசு மீண்டும் காவிரி சிக்கல் ஏற்படுத்த முயன்ற போது அரசி மங்கம்மாளும், பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.

அந்த இரண்டு முறை காவிரி உரிமையில் வென்ற தமிழகம் கடந்த 50 ஆண்டுகளாக மட்டும் ஏன் தோல்வியையே தழுவிக் கொண்டிருக்க வேண்டும். 

கர்நாடகத்தை பொறுத்த வரை, 900 ஆண்டுகளுக்கு முன்பு செய்த அதே வேலையைத்தான் 350 ஆண்டுகளுக்கு முன்பும் செய்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பும் செய்தது. கடந்த மூன்று முறையும், கடைமடை மாநிலங்களின் காவிரி உரிமையை அணைகட்டி அத்துமீறியது. 

900 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகம் அத்து மிறிய போது, நமது முப்பாட்டன் இரண்டாம் இராசராச சோழன்  என்ன செய்தார்? கர்நாடகத்தின் அத்துமீறலை அப்புறப் படுத்தினார்.

350 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகம் அத்து மிறிய போது, நமது முப்பாட்டி மாங்கம்மா என்ன செய்தார்? கர்நாடகத்தின் அத்துமீறலை அப்புறப் படுத்தினார். 

50 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகம் அத்து மிறிய போது, நாம் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தியா விடுதலை பெற்று ஒரு நாடாகி விட்டது; கர்நாடகம் நமது பக்கத்து மாநிலம் ஆகிவிட்டது என்ன செய்யலாம் என்று விழிக்கிறோம்.

ஒரேநாடு, ஒரேமாநிலம், ஒரேஊர், ஒரேதெரு, பக்கத்து விட்டுக்காரன் நமது இடத்தில் ஒரு அங்குலம் சேர்த்து தன் வீட்டைக் கட்டி விட்டால் அறங்கூற்று மன்றத்தில் நாம் கோருவது ஆக்கிரமிப்பு அகற்றம் தானே? அதுதானே நிரந்தரத் தீர்வாக முடியும், அதை விடுத்து இருவரும் இப்படி இப்படி பயன் படுத்திக் கொள்ள என்று தற்காலிகமான, நமது இருவீட்டார் உரிமையையும் அரசுக்கு விட்டுக் கொடுத்து விட்டு ஒரு மேலாண்மை அமைப்பையா கோருகிறோம்?

ஆக நாம் என்ன செய்தோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்;;;ய வேண்டும் என்று தெரியாமல் செய்து கொண்டிருக்கிறோம்! 

அத்துமீறியவன் ஆக்கிரமிப்பை அகற்றாமல் எப்படி நியாயம் பிறக்கும்? தமிழனுக்கான நியாயத்தை, நடுவண் அரசோ, அறங்கூற்று மன்றமோ விரும்பி வந்து தருமா? காவிரிச் சிக்கலுக்கு தவறான தீர்வைக் கேட்டுக் கொண்டிருக்கிற நாம் மடையர்களா? மடத்தனமாக நாம் கோருவதை நிரந்தரத் தீர்வாக எப்படித் தருவது என்று யோசித்து யோசித்து மண்டையை உடைத்துக் கொள்கிற நடுவண் அரசும், அறங்கூற்று மன்றமும் பிழையானவர்களா! நம்முடைய தலைவர்கள், இரண்டாம் இராசராச சோழன் போலோ, மங்கம்மா போலவோ அறிவாளியாக இல்லாதது தானே பிழை.

தோன்றுமிடத்துக் காவிரி கர்நாடகத்திற்கு சொந்தமானது. கடைமடைக் காவிரி அது பாயும் மாநிலங்களுக்குச் சொந்தமானது. காவிரியை யாருக்குப் பொது என்று எப்படி நிறுவுவது? யாருக்கும் உடைமையில்லை என்று எப்படிச் சொல்லுவது? அதையெல்லாம் நாம்தானே சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறோம். நடுவண் அரசை காவிரியை எடுத்துக் கொண்டு நமக்கான நீரை ஏதோ ஒரு கணக்கு போட்டு கொஞ்சமாவது கொடுங்கள் என்று கெஞ்கிக் கொண்டிருக்கிறோம்.

நாம் அப்பத்தை பகிர்ந்து தர குரங்கை நாடினால், 900 ஆண்டுகளாக காவிரியை பறித்துக் கொள்ள மீண்டும் மீண்டும் முயலுகிற கர்நாடாகாகாரன் நம்மைப் போல் முட்டாளாக இருப்பானா?

எப்படி நமது நிலத்தை ஆக்கிரமித்த பக்கத்து வீட்டுக்காரனின் ஆக்கிரமிப்பை அகற்றாமல் பக்கத்து வீட்டுக்காரனோடு வசதிகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு அமைப்பை மூன்றாம் நபரை வைத்து தொடர்ந்து பேணுவது சாத்தியமில்லையோ அப்படி மூன்றாம் நபர் அமைப்பு எதுவும் காவிரி பகிர்வுக்கு சாத்தியப் படாது. அத்துமீறலை அப்புறப் படுத்துவது ஒன்றே வழி. ஆக காவிரிச்சிக்கலுக்கு முறையான தீர்வைக் கண்டுபிடிக்கவில்லை! நம்  முன்னோர்கள் வழியையும் பின்பற்ற வில்லை. தவறான தீர்வு வேண்டி போராடிக் கொண்டிருக்கிறோம். இது காவிரி நிலைமையென்றால், 

நீட் தேர்விலும் அப்படித்தான், நமது கல்வி நிறுவனங்கள், நமது மருத்துவமனைகள். நமது கல்வியாளர்கள், படிக்கப் போவது நமது மாணவர்கள், பயிற்றுவிக்கப் போவது நமது கல்வியாளர்கள், அதற்கான நிறுவனங்கள் நமது வரிப்; பணத்தில் கட்டமைக்கப் பட்டது. ஆகப் போகிற செலவை நமது வரிப்பணத்தில் இருந்து ஈடுசெய்யப் போகிறோம்;. 

இதிலே குறுக்கே ஒரேயொரு தேர்வை நடத்தும் சட்டாம் பிள்ளை வேலையை மட்டும் நடுவண் அரசு செய்ய வேண்டிய தேவை என்னயிருக்கிறது என்று ஒத்துழையாமையை, தமிழக அரசிலிருந்து தொடங்கி, மாணவர்கள் வரை பின்பற்றுவது தான் சரியான எதிர்ப்பாக இருக்க முடியும். இதிலே எதிர்ப்பை தொடங்க வேண்டிய தமிழக எடப்பாடி-பன்னீர் அரசு கைக்கட்டிக் கொண்டு சும்மாவிருந்ததுதாம் நூறு விழுக்காடு தவறும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,780.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.