24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் முதல்வர் செயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான கால்கோள் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்வில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மறைந்த முதல்வர் செயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகேயுள்ளது. செயலலிதாநினைவிடத்தை நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பினிக்ஸ் பறவை போல அரசியலில் அதிரடியாக எழுந்து வந்தவர் செயலலிதா என்று பறைசாற்ற வேண்டும் என்பது அதிமுக தலைமை விருப்பம். அதற்கேற்ப நினைவு மண்டபமும் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. செயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவதை அதிமுக தொண்டர்களும், தமிழ்மக்களும் வரவேற்பார்கள்தான்! ஆனால், ஆட்சியில் தக்க வைத்த பாஜகவுக்கு நன்றி செலுத்தும் முகமாக செயலலிதா கொள்கைகளுக்கும் சேர்த்தல்லவோ நினைவு மண்டபம் கட்டுகிறீர்கள். இரண்டு நீட் பலிகளின் ஓலம் செயலலிதாவிற்கு கேட்டு விடக் கூடாது என்பதற்குதானே இன்றைக்கு அதிகாலையில் இவ்வளவு அவசரமாக இந்தக் கொண்டாட்டம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,780.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.