Show all

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி! பதின்மூன்றாவது ஐ.பி.எல். துடுப்பாட்டத் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு வாகையர் மும்பை இந்தியன்சும் மோதியதில். 

04,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: பதின்மூன்றாவது ஐ.பி.எல். துடுப்பாட்டத் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். சுற்றுக்கள் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் வாகைச் சுற்றுக்கு முன்னேறும்.

அபுதாபியில் நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு வாகையர் மும்பை இந்தியன்சும் மோதின. பூவாதலையாவில் கெழித்த சென்னை கிங்ஸ் அணியின் தலைவர் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கினர். ரோகித் சர்மா நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் வெளியேறும் நிலையில் பத்து பந்;துக்கு அவர் எடுத்த ஓட்டங்கள் 12. சிறிது நேரம் அதிரடி காட்டிய டி காக் 33 ஓட்டங்களில் (20 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 17 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் சவுரப் திவாரியும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து மும்பை அணியின் ஓட்டமெடுப்பு வேகத்தை அதிகப்படுத்தினர். ஜடேஜாவின் பந்து வீச்சில் பாண்ட்யா இரண்டு ஆறுகளைப் பறக்க விட்டார். இதற்கிடையே சவுரப் திவாரி 42 ஓட்டங்கள் (31 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் நடையை கட்டினார். பொல்லார்ட் 18ஓட்டங்கள், குருணல் பாண்ட்யா 3ஓட்டங்கள் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் சென்னை கிங்ஸ் பந்து வீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி 6 ஓவர்களில் அந்த அணி 41 ஓட்டங்களை மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சென்னை தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், ஜடேஜா, தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டும், சாவ்லா, சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷேன் வாட்சன் (4 ஓட்டங்கள்) டிரென்ட் பவுல்ட் பந்துவீச்சிலும், முரளிவிஜய் (1 ஓட்டம்) பேட்டின்சன் பந்து வீச்சிலும் எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். இதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடுவும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர்.

தொடக்கத்தில் நிதானம் காட்டிய அம்பத்தி ராயுடு அதன் பிறகு அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்து அசத்தியது தமிழகப் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

அணியின் வெற்றிப்புள்ளிகள் 121 ஓட்டங்களாக உயர்ந்த போது அம்பத்தி ராயுடு 71 ஓட்டங்களில் (48 பந்து, 6 பவுண்டரி, 3 ஆறுகள்) ராகுல் சாஹரின் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜடேஜா (10ஓட்டங்கள்) தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பிறகு வந்த சாம் கர்ரன் 6 பந்தில் 18 ஓட்டங்கள் (ஒரு பவுண்டரி, 2 ஆறுகள்) விளாசி நெருக்கடியை தணித்தார். ஆனாலும் ஆட்டம் கடைசி ஓவருக்கு நகர்ந்ததால் பரபரப்பு தொற்றியது.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரின் முதல் 2 பந்தையும் பிளிஸ்சிஸ் பவுண்டரிக்கு விரட்டியடித்து இலக்கை எட்ட வைத்தார்.

சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிராக தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு சென்னை அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும்.

கொரோனா அச்சத்தால் இந்த ஐ.பி.எல். தொடரில் ரசிகர்கள் திடலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பவுண்டரி, ஆறுகள் அடிக்கப்பட்ட போது திடலில் உள்ள பெருந்திரையில் கொண்டாடிகளின் கைத்தட்டல் ஆர்ப்பரிப்பும், நடன அழகிகளின் துள்ளல் நடனமும் அடங்கிய பழைய காணொளிக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.