Show all

வந்தது ஆப்பு- நாவலந்தேயம் பெயரடியாக விளங்கும் இந்தியா எனும் பெயருக்கு!

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனுவை- அறங்கூற்றுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்து-  நடுவண் அரசுக்கு கோரிக்கை மனுவாக அனுப்ப உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு- மனுவைத் தள்ளுபடி செய்தது.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனுவை- உச்சஅறங்கூற்றுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்து-  நடுவண் அரசுக்கு கோரிக்கை மனுவாக அனுப்ப உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு- மனுவைத் தள்ளுபடி செய்தது. 

அதாவது இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றம் கோரிய வழக்கு தள்ளுபடி. ஆனால் அதே சமயம் அந்த வழக்கை கோரிக்கையாக மாற்றி நடுவண் அரசுக்கு அனுப்ப பரிந்துரைத்து அந்த மனுவைக் கோரிக்கையாக அங்கீகரித்துள்ளது உச்சஅறங்கூற்றுமன்றம்.

இந்தியாவின் பெயரை மாற்றக் கோரி டெல்லியைச் சேர்ந்த நமா என்பவர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை பதிகை செய்திருந்த மனுதாரர் தரப்பில் அணியமான வழக்கறிஞர், கிரேக்க மொழியில் உள்ள இண்டிகா என்ற சொல்லில் இருந்தே இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதாக வாதிட்டார்.

கிரேக்க மொழியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட இந்தியா என்ற ஆங்கில பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும், நாட்டு மக்கள் காலனி ஆதிக்க சிந்தனையில் இருந்து வெளிவர நாட்டின் பெயரை பாரத் என முழுமையாக மாற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

நாட்டின் பெயர்கள் வெவ்வேறு ஆவணங்களில் வெவ்வேறு விதமாக உள்ளன. ஆதார் அட்டையில் பாரத் சர்க்கார் என்று உள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் “யூனியன் ஆப் இந்தியா”, பாஸ்போர்ட்டுகளில் 'இந்திய குடியரசு” என இருப்பது குழப்பத்தை உருவாக்குகிறது. ஒருவர் தேசத்தின் பெயரை அறிந்து கொள்ள ஒரே மாதிரியான பெயர் இருக்க வேண்டும். என்றும் வாதிடுகிறார். 

(உண்மையில் அவர் சொல்லுவது போல ஆங்கிலத்தில் எங்கு இந்தியா என்று எழுதப்பட்டாலும் அதன்மொழிபெயர்ப்பாக ஹிந்தியில் பாரத் என்று மட்டுமே எழுதப்படுகிறது என்பது மட்டுமே உண்மை. ஹிந்தியில் எங்கேயும் ஒருபோதும் இந்தியா என்று எழுதப்படுவதேயில்லை என்பது மட்டுமே உண்மை. இந்த வழக்காளியின் நோக்கம் ஆங்கிலத்திலும் பாரத் என்று எழுதப்பட வேண்டும் என்பதேயாகும்.)

நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும். நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடுவண் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த மனு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தலைமை அறங்கூற்றுவர் போப்டே அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை அறங்கூற்றுவர்கள் தள்ளுபடி செய்தனர். அதேசமயம், நாட்டின் பெயரை பாரத் என மாற்றக் கோரிய மனுவின் நகலை, நடுவண் அரசின் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டனர். இந்த மனுவை கோரிக்கை மனுவாக கருதி மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றும் அறங்கூற்றுவர்கள் தெரிவித்தனர்.

ஆங்கிலம் மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று அறியப் படுகிற பெயர், தமிழகம் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநில மொழிகளிலும் புழக்கத்தில் இல்லை. 

மாற்றாக இந்தியாவை, தமிழகம் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சம்சுகிருதத்தின் பாரதம் என்ற சொல்லை தங்கள் மொழி இயல்புகளுக்கு ஏற்ப கொஞ்சமான மாற்றத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற கீழ்கண்ட 21 மொழிகளில் இந்தியா கீழ்க் கண்டவாறு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

1.அசாமிய மொழியில் இந்தியாவை பாரோத் என்றும், 

2.பெங்காலி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும்,

3.போடோ மொழியில் இந்தியாவை பாரோத் என்றும்,

4.டோக்ரி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

5.குஜராத் மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

6.ஹிந்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

7.கன்னட மொழியில் இந்தியாவை பாரதா என்றும்,

8.காசுமீரி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

9.கொங்கணி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும்,

10.மைதிலி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

11.மலையாள மொழியில் இந்தியாவை பாரதம் என்றும்,

12.மொய்தி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும்,

13.மராத்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

14.நேபாளி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

15.ஒரிய மொழியில் இந்தியாவை பாரதோ என்றும்,

16.பாஞ்சாபி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

17.சமசுகிருத மொழியில் இந்தியாவை பாரதம் என்றும்,

18.சந்தாளி மொழியில் இந்தியாவை பாரதோ என்றும்,

19.சிந்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

20.தெலுங்கு மொழியில் இந்தியாவை பாரததேசமு என்றும்,

21.உருது மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

22.தமிழ் மொழியில் மட்டும் இந்தியா இந்தியாவென்று அழைக்கப் படுகிறது.

வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். இந்தியா என்ற சொல்லுக்கு வடமொழியில் குப்பை என்று பொருள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் வடமொழியினர். இந்தியாவை, ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை ஒப்பு நோக்குங்கள். காங்கிரஸ் கட்சியின் பெயர் கூட ஹிந்தியில் பாரதிய இராஷ்டிர காங்கிரஸ் என்றுதான் எழுதப் படுகிறது.

பா- என்ற சமஸ்கிருதச் சொல்லிற்கு, ஒளி என்று பொருளாம். இதனாலேயே உலக இருளை அகற்றும் ஆதவனை பாஸ்கரன் என்று குறிக்கிறதாம் வடமொழி. ஞாயிற்றுக்கு ‘பாநு’ என்ற பெயரும் வடமொழியில் உண்டாம். “ரத” என்ற சொல்லிற்கு ‘முழ்கியிருத்தல்- திளைத்திருத்தல்’ என்ற பொருளாம். எனவே “ஞானத்தில் திளைத்திருந்த பூமி” என்று பெயர் விளங்க, இந்தியாவில் ஆரியர் வசித்த பகுதிக்கு பாரதம் என்ற பெயர் பெற்றதாக வடஇந்தியர்கள் சொல்லி மகிழ்கின்றனர்.

ஆக, ஆங்கிலம் மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று பெயர் விளங்க காரணம் என்ன? தமிழகம் மட்டும் இந்தியா என்று அழைப்பதால் இந்தியா என்பது தமிழ்ச் சொல்லா? அப்படியானால் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களுக்குச் சொந்தமானதா? ஆரியர் வருகை, மற்றும் வடமொழி கலப்பால்தான் இந்தியா, பாரதமாகி இந்தியாவில் இத்தனை மொழிகளும் தோன்றக் காரணமானதா? அதனால்தான் இந்தியாவின் அனைத்து மொழியினரும் இந்தியாவை பாரதம் என்றே அழைத்துக் கொள்கின்றனரா? ஆங்கிலேயர் மற்றும் உலகினர் யாருக்கும் இந்தியாவின் ஆரிய வரவுக்கு முந்தைய தமிழ்இந்தியாவோடுதான் தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டனவா?  அனைத்தும் உண்மைதான்! 

தமிழர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலும் கூட அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.

அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம். தமிழர்களே உலகம் முழுவதும் கப்பல் செலுத்தி, தமிழகத்து முத்து, மயில்தோகை, ஏலம், மிளகு. மஞ்சள், மெல்லிய துணி வகைகள் ஆகியவற்றை விற்று வந்தார்கள். இந்தப் பொருள்களுக்கு மாற்றாக தமிழகத்தில் கிடைக்கப் பெறாத தங்கத்தை மட்டுந்தாம் பண்டமாற்றாக வாங்குவார்களாம் தமிழ் வணிகர்கள். அரபு நாட்டில் மட்டும் குதிரைகளை பண்டமாற்றாகப் பெற்றிருக்கிறார்கள் தமிழ் வணிகர்கள்.

எகிப்து நாட்டின் பேரழகி கிளியோபட்ரா தமிழக முத்துக்களைப் பாலில் ஊற வைத்து குளிப்பார்களாம். எகிப்து நாட்டு அறிஞன் தாலமி இந்தியா தன்னுடைய நாட்டின் செல்வத்தை ஒப்பனை பொருட்களை கொடுத்து விட்டு அளவில்லாத தங்கத்தைப் பெற்றுச் செல்வதாக புலம்பியதாக எகிப்து வரலாறு தெரிவிக்கிறது. கிளியோபட்ரா தமிழ்மொழி அறிந்திருந்தார் என்றும் தெரிய வருகிறது.

இவ்வாறாக உலகம்- 

தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம்.

உலகினர் தமிழர் வானியலில், கடல்தொழில் நுட்பத்தில், கப்பல் கட்டுதலில், கடல்கடந்த வணிகத்தில் என்பனவான நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம்.

ஆனாலும் இந்தியா குறித்து ‘நாவலந்தேயம்’ என்ற அறிமுகம் மட்டுமே உலகினருக்கு இருந்தது.

அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - India என்று பதிவு செய்தனர்.

அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.

அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது-

ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால்,

அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவலIndiaம் இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை.

பிந்தைய வரலாறு நாம் அறிந்ததுதானே.

ஆக, நாவலந்தேயம் என்ற சொல்லில் இருந்துதான் இந்தியா என்கிற சொல் வந்த நிலையில் தமிழர்கள் மட்டுமே இந்தியாவைப் போற்றிக் கொள்கின்றனர். உலகினர் இந்தியா குறித்து முதலாவதாக அறிந்தது நாவலந்தேயத்தையே. அதனால் உலகினரும் இந்தியா என்ற சொல்லையே போற்றிக் கொள்கின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.