19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அடுத்த ஆண்டு பாரளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், இதுவே மோடி அரசின் ஆட்சியின் கடைசி வரவு-செலவு திட்டம் என்கிற நிலையில், மக்களின் எதிர்பார்ப்பு வானளாவி இருந்தது. நடுவண் அரசு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வழங்கிய வரவு-செலவு கொடியேற்ற விழாவில் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்த கதையாகத் தான் இருக்கிறது. எல்லா அறிவிப்புகளும் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியைக் கொடுத்தால் தான் செய்ய முடியும் என்ற அறிவிப்பாகவேயுள்ளது. இந்த வரவு-செலவு திட்டத்தில் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. (குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்துவது என்பதில் வேளாண் விளைபொருட்களின் விலையைக் கூட்டுவது ஆகாது. கொடுத்துக் கொண்டிருக்கிற விலையில் இத்தனை விழுக்காடு கூடுதலாகத் தரப்படும் என்றால் தான் விளைபொருட்களின் விலை கூடக் கிடைக்கும். இது வெறுமனே ஏமாற்று உத்தியே. பாசன திட்டங்கள் மற்றும் விவசாய திட்டங்களுக்கு கூடுதல் முதலீடு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டுக்கு உதவுகிற நோக்கமல்ல. இன்னும் ஐந்தாண்டுகள் ஆட்சியைக் கொடுங்கள் என்பதற்கான நோக்கமே. சூரிய சக்தி மின்சாரம் மூலம் இயக்கப்படும் மோட்டார் பம்புகள் வைத்து இருக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் கூடுதல் சூரிய சக்தி மின்சாரத்தை விலைக்கு வாங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி மின்சாரம் மூலம் இயக்கப்படும் மோட்டார் பம்புகள் என்பது விரல் விட்டு எண்ணி விடும் அளவில்தான் உள்ளது. சூரிய சக்தி மின்சாரம் மூலம் இயக்கப்படும் மோட்டார் பம்புகள் விலை இலட்ச கணக்கில் ஆகும். அதை அமைப்பதற்கு இத்தனை விழுக்காடு மானியம் என்பதுதாம் இதுவரை ஆண்ட அரசுகள் அறிவித்த திட்டம். பாஜக அப்படியெல்லாம் மக்களுக்கு செய்யாது என்பதற்கு இது சிறந்த மேற்கோள். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 50 கோடி ஏழை மக்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள திட்டத்தை நகலெடுத்ததாகும். உலகத்திலேயே முதன் முதல் தமிழகத்தில் தான் இந்தத் திட்டம் தொடங்கப் பட்டது என்றபோதும், இந்தத் திட்டத்தை ஏழைமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப் படவில்லை என்பதே உண்;மை. மருத்துவ காப்பீடு அளிக்கும் நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும். சாலை போக்குவரத்து மற்றும் தொடர்வண்டி போக்குவரத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, கூடுதல் முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டுமான நிறுவனங்கள், இன்ஜினியரிங் நிறுவனங்கள், தொடர்வண்டி பெட்டி தயாரிப்பு நிறுவனங்கள் பலன் பெற வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிராந்திய விமான நிலையங்கள் கட்டுமானம் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது, விமான நிலைய கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் பலன் தரும். மல்லையா யாராவது பினாமிகளை அனுப்பி வைப்பார். இறக்குமதி செல்பேசிகள் மீதான சுங்க வரி, 15 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. மியூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதி நிறுவனங்களில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் தொகைக்கு 10 விழுக்காடு வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிதி முதலீட்டாளர்களுக்கும், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்திற்குத் தேவையான நிதியை ஈடுசெய்ய சுகாதாரம் மற்றும் கல்வி வரி 3 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து, பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் அனைத்து பொருட்கள் விலையும், அனைத்து சேவைகளின் கட்டணமும் சிறிதளவு உயர வாய்ப்பு உள்ளது. வரவு-செலவு திட்டத்தின் முதன்மையான அம்சங்கள் குறித்து நடுவண் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த 50 முதன்மையான வெறுமனே நடுவண் அரசு பீற்றிக்கொள்கிற அம்சங்கள்: 1. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது. 2. விவசாயிகளின் வருவாயை உயர்த்த முதன்மைத்துவம் அளிக்கப்படுகிறது. 3. இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும். 4. நடப்பு நிதிநிலை ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம் 7.2- 7.5 விழுக்காட்டை எட்டும். 5. அரசியல் லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. 6. வேளாண்மை உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. 7. அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு. 8. வரி ஏய்ப்பு குறைந்துள்ளது. 9. அரசு கொள்கை முடிவு எடுப்பதில் இருந்த தேக்க நிலையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம. 10. பிரதமர் கிராம சாலை திட்டம் வேளாண் மையங்களை இணைக்கும் 11. வேளாண் கட்டமைப்பு வசதிகளுக்கு 22000 கோடி ஒதுக்கீடு 12. இயற்கை வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க நடவடிக்கை 13. இந்தியாவின் பொருளாதாரம் 2.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 14. விவசாயிகள் கடன் அட்டைத்திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைக்கும் விரிவாக்கம் 15. சேவைகள் மக்களின் இல்லத்திற்கே கொண்டு செல்லப்படுகின்றன. அல்லது அவரது வங்கிகளை அடைகின்றன. 16. வேளாண் ஏற்றுமதிக் கொள்கை எளிதாக்கப்பட்டுள்ளது. 17. உணவு பதப்படுத்துதல் துறைக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 18. வேளாண் ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் அளவை எட்ட வாய்ப்பு. 19. 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும் -நிதி அமைச்சர் 20. மீன் மற்றும் இறால் வளத்துறைக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 21. கிராமப்புறங்களைச் சேர்ந்த 8 கோடி மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும். 22. டெல்லியில் மாசுக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய நடவடிக்கை. 23. அடுத்த நிதி ஆண்டிற்குள் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும். 24. 2020-ல் அனைவருக்கும் வீடு. கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதிக்கென பிரத்யேக நிதி. 25. 2022-க்குள் அனைவருக்கும் வீடு. 26. ஊரக சாலைத்திட்டத்தின் கீழ் 3 கோடியே 21 லட்சம் ஊரக வேலை வாய்ப்பு. 27. ஆசிரியர் பயிற்சியில் ஒருங்கிணைந்த பி.எட் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 28. பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சித் தர புதிய திட்டம். ஒருங்கிணைந்த பி.எட். திட்டம் அறிமுகம். 29. கல்வித்துறைக்கு ரூ 1 லட்சம் கோடி முதலீடு. நவோதையா பள்ளிகள் அடிப்படையில் புதிய ஏகலைவன் பள்ளிகள். 30. நேர்மையான ஊழலற்ற அரசை வழங்க உறுதி. 31. ஊரகப் பகுதிக்கு கூடுதல் நிதி வழங்க முடிவு. 32. வளர்ச்சிப் பாதையில் உற்பத்தித் துறை. 33. வேளாண், கல்வி, ஊரகத்துறை, சுகாதாரம் ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம். 34. சுகாதார இந்தியாவை உருவாக்க ஆயுஷ்மான் இந்தியா திட்டம். 35. அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து. 36. 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி வீதம் ஏற்படுத்தப்படும். 37. 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். 38. ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு 50 விழுக்காடு கூடுதல் நிதி ஒதுக்கீடு. 39. சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 1.35 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு . 40. கங்கையை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் . 41. முத்ரா கடன் திட்டத்திற்கு ரூ 3லட்சம் கோடி. 42. மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம். 43. ஷெட்யூல்டு வகுப்பினர் நலனுக்காக ரூ 56919 கோடி ஒதுக்கீடு. 44. காசநோயாளிகள் நலனுக்காக ரூ 600 கோடி ஒதுக்கீடு -நிதி அமைச்சர் 45. வேலைவாய்ப்பை பெருக்குவதே அரசு கொள்கைத் திட்டங்களின் மையம் ஆகும் .46. ஸ்மார்ட் மற்றும் அம்ரூத் நகரங்களுக்கு ரூ 2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு 47. நாட்டின் 10 பிரபலமான சுற்றுலாத் தலங்கள் நாட்டின் அடையாளமாக உயர்த்தப்படும் . 48. கட்டமைப்புத் துறையில் ரூ 50 லட்சம் கோடி முதலீடு செய்ய பரிசீலனை 49. 9000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை நடப்பு நிதி ஆண்டிலேயே அமைத்து முடிக்கத் திட்டம். 50. 4000 கி.மீ. ரெயில்வே பாதைகள் மின் மயமாக்கப்படும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,685
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.